இதயத்துக்கு இதமானது முருங்கைப்பூ
முருங்கை மரம் ஒரு மருத்துவ பொக்கிஷம் என்று சொல்லும் அளவுக்கு, அரிய மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது. இதோ அது பற்றி சில மருத்துவ குறிப்புகள். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டையில், உலோகச் சத்துக்கள் அதிகம் உள்ளன. உணவில் கலந்த விஷத்தை முறிக்கும். நரம்புக் கோளாறுகளை போக்கும். முருங்கை இலையை உருவி, காம்புகளை நறுக்கி விட்டு, பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து, உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கு, முருங்கைக்காய் கை கண்ட மருந்தாகும். முருங்கைக்காயை வேக வைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும், ஒரு டம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவும். முருங்கைக்காய் சாம்பார், எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவை மட்டுமல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ, முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தி அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல் மற்றும் மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையை, கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின், நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நரை சீக்கிரம் வராது. ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. முருங்கைப் பூ இதயம் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணும் என்றாலும், அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.