சளிபிடிக்கும் போது குழந்தைகளுக்கு காது வலிக்கிறதா அடினாய்டு பிரச்னையாக இருக்கலாம்
'பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் போது காதுவலியும் இருந்தால் வைரஸ் தொற்றாக இருக்கலாம். டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்'என காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணரும், மதுரை அரசு மருத்துவமனை டீனுமான அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பனிக்காலத்தில் வரும் வைரஸ் தொற்றுநோய் மூக்கு, தொண்டை பகுதிகளை அதிகம் பாதிக்கும். தொண்டையில் 'டான்சில்' பிரச்னை ஏற்பட்டு சாப்பிடும் போது தொண்டை வலியும், எச்சில் முழுங்கும் போதும் வலிக்கும்.இருமல் சளியும் சேர்ந்து வரும். அதுபோல 'அடினாய்டு' சதை மூக்குக்கு நேர் பின்னால் இரண்டு 'டான்சிலுக்கு' மேல் உள்ளது. இதை ஸ்கேன், எண்டோஸ்கோப்பி மூலமே பார்க்க முடியும். வைரஸ் தொற்று நோய் வரும் போது 'டான்சில், அடினாய்டு' இரண்டும் பெரிதாகி விடும்.'அடினாய்டு' சதை வீங்கி பெரிதாவது தான் காதுவலிக்கான முக்கிய காரணம். இது வெளிப்பார்வைக்கு தெரியாது. குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் போது மூச்சுவிட முடியாமல் வாய் வழியாக மூச்செடுப்பர். வாயைத் திறந்து துாங்கும் குழந்தைகளுக்கு 'அடினாய்டு' பெரிதாக இருக்கிறதென்று அர்த்தம். குழந்தைக்கு சளி பிடிக்கும் போது துாக்கத்தில் குறட்டை விடும் சத்தம் கேட்க முடியும். சத்தத்துடன் மூச்சு விடுவர்.இயற்கையாகவே காதுக்கும் தொண்டைக்கும் இடையே 'யூஸ்டேசியன்' குழாய் உள்ளது. உள் காதில் காற்றழுத்தத்தை சரியாகவைப்பதற்கும் காதில் நீர் உற்பத்தியானால் தொண்டை வழியே வழியும் வகையில் இக்குழாய் உள்ளது. இது காதில் ஆரம்பித்து மூக்கின் பின்னால் 'அடினாய்டு'க்கு இருபக்கமும் திறக்கும்.வைரஸ் தொற்றால் சளி பிடிக்கும் போது இக்குழாய் சரியாக வேலை செய்யாமல் அடைப்பு ஏற்பட்டு காதிலும் நீர் சேர வைக்கும். அதனால் காது ஜவ்வு வெளிப்பக்கமாக வீங்கி காதுவலியால் அவதிப்படுவர். மூக்கில் நீர்வடியும், லேசான காய்ச்சல், மூக்கில் பேசுவது போன்ற பிரச்னைகள் வரும். மூக்கில் நீர் வடிவதற்கான மருந்தை டாக்டர்கள் பரிந்துரைப்பர்.ஒருவாரம், பத்து நாட்களில் 'அடினாய்டு' சதை வீக்கம் குறைந்து இயல்பாக மூக்கில் சுவாசிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூக்கில் நீர்வடிவது நின்றுவிடும்.காதில் நீர் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஆவி பிடிக்க வைப்பது நல்ல தீர்வு. காய்ச்சல் மருந்து கொடுத்தால் காதில் உள்ள நீர் தொண்டை வழியே இறங்கி விடும். பாக்டீரியா தொற்றாக மாறினால் 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் பரிந்துரைக்கலாம். சரியான பின் குழந்தை மூக்கால் சுவாசிக்கிறதா என கண்காணிக்க வேண்டும். இரவில் மூச்சுவிட சிரமப்பட்டால் வீக்கம் குறையவில்லை என்று அர்த்தம்.சிலநேரங்களில் காது கேட்கும் தன்மை குறையும். காதில் சீழ் வடியும். 70 முதல் 80 சதவீதம் காது தொந்தரவுக்கு அடினாய்டு தான் பிரச்னை. எனவே காது வலியை உதாசீனப்படுத்தக் கூடாது என்றார்.