உடல் சூட்டை குறைக்கும் பதிமுகம்
ஒருவருக்கு உடல் சூடாக இருக்கிறது என்பதை, கண் எரிச்சல், வெயிலில் போக சிரமம், உணவு சாப்பிட்ட பின் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், உள்ளங்கால், கைகளில் எரிச்சல், அதிகமாக வியர்வை, சிறிய விஷயங் களுக்கு எல்லாம் உடல் பதற்றம் அடைவது, துாக்கமின்மை, நா வறட்சி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளாக வெளிப்படும். அவரவர் உடல் தன்மைக்கு ஏற்றவாறு, இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறி களாகவோ வெளிப்படலாம். சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி விரைவாக இருக்கும்; உதிரப் போக்கும் அதிகமாக இருக்கும். உடல் சூட்டிற்கு காரணம், உடலில் பித்தம் அதிகரிப்பது தான்! உணவு முறையில் மாற் றத்தை கொண்டு வர வேண்டும். அறுசுவைகளில் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு இந்த மூன்று சுவைகளையும் அதிகமாக சாப்பிட்டு, புளிப்பு, உப்பு, காரத்தை குறைக்க வேண்டும். கறிவேப்பிலை, வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய் உட்பட கசப்பு சுவை உள்ள பொருட்களை உணவில் சேர்த்தால், பித்தம் குறையும் இயற்கையான இனிப்பு சுவையுள்ள பால், நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும், 'பதிமுகம்' என்ற பொடியை, தண்ணீரில் சேர்த்து காய்ச்சினால், இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும். அந்த தண்ணீரை குடிக்கலாம். துவர்ப்பு சுவையுள்ள வாழைப் பூ, இளம் வாழைக்காய், வாழைத்தண்டு உள்ளிட்டவை பித்தத்தை குறைக்கும். இஞ்சி, பட்டை, கிராம்பு மற்றும் சுக்கு போன்ற காரமான பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது, புளித்த மாவு, தயிர், மீன், முட்டை, கோழி இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக, இவை நல்ல உணவுகள் என்றாலும், பித்த உடல்வாகு இருப்பவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டு மாமிசம், கொத்தமல்லி, சீரகம் சாப்பிடலாம். உணவு முறையில் மாற்றம் செய்த பின்னும், உடல் சூடு இருந்தால், தகர தாரா போன்ற பஞ்சகர்மா சிகிச்சை செய்வது பலன் தரும். மூலிகை கஷாயங்கள், மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டால், உடல் சூடு குறையும்; அதனால் ஏற்படும் நோய்களும் குணமாகும். டாக்டர் கு.சுடர்கொடி, ஆயுர்வேத மருத்துவர், உதவி மருத்துவ அதிகாரி, அரசு ஆரம்ப சுகாதார மையம், திருப்பூர் மாவட்டம். 94448 54993 sudarkkodi78@gmail.com