உள்ளூர் செய்திகள்

உணவை அதிகமாக குளிர வைப்பதும், அடிக்கடி சூடுபடுத்தி உண்பதும் தவறு

ஆயுர்வேத மருத்துவத்தை தற்போது மக்கள் அதிகமாக நாடத் துவங்கியுள்ளனர். ஆங்கில மருத்துவ முறைக்கும், இதற்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு நன்கு தெரிகிறது. குணம் பெறலாம் என்ற ஆதாரக் கருத்துக்களுடன், தக்க ஆயுர்வேத மருத்துவர்களை நாடுகின்றனர். அதன் அடையாளமாக சென்னையில் ஆயுர்வேத மருத்துவ டாக்டர்கள், அதற்குரிய மருத்துவமனைகள் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக் கிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆஸ்துமா, மூட்டுவலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை கூட குணமாக்க சிறந்த மருத்துவம் உள்ளது. இத்தகவலை, 'இம்ப்காப்ஸ்' மருந்து வாங்கும் டாக்டர் குழுவில் இடம் பெற்றவரும், இந்தியன் ஏர்லைன்ஸ் டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றவருமான டாக்டர் என்.வெங்கடேஸ்வர ராவ் கூறி னார். சென்னை மேற்கு மாம்பலத்தில், லிம்ரா ஆயுர்வேத மருந்தகத்திற்கு வந்து சிகிச்சை அளிக்கிறார். அவர் அளித்த தகவல்:

ஆயுர்வேத மருந்துகள் ஹெர்பல் மருந்து வகையைச் சார்ந்தவை. நச்சுத் தன்மை கிடையாது. தங்கம் போன்றவற்றில், அதன் உலோகத் தன்மையை மாற்றி, உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல், நன்மை பயக்கும் வகையில், ஆயுர்வேத மருந்துகளில் கலக்கப்படுகின்றன. அவை, சோதனைக்கூடங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது, பிரபல பெரிய மருந்து நிறுவனங்கள், தரக் கட்டுப்பாட்டுடன் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கின்றன. பொதுவாக ஒவ்வாமை, மூட்டுவலி ஆகியவற்றிற்கு ஆங்கில மருத்துவ முறையில், 'ஸ்டிராய்டு' என்னும் ஊக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. எங்களது அணுகுமுறையில், உடல் முழுவதும் சேர்ந்திருக்கும் நச்சை அகற்றும் வழியில் மருந்துகள் தரப்படுகின்றன. அதனால், நோயிலிருந்து விடுபடலாம். ஒரு நோயாளி வந்ததும், அவர் கண், நாக்கு உட்பட புறத்தோற்ற பாதிப்பை பார்த்து அறிதல், நாடி பார்த்து, அவருக்கு என்ன பாதிப்பு என்று அறிதல், அத்துடன் நோய் பாதிப்பு மற்றும் அதன் வரலாறு குறித்து கேள்வி கேட்டு பதில் பெறுதல் ஆகியவற்றை பின்பற்றுகிறோம். இம்மூன்றையும் முறையே, தர்சனம், பர்சனம், பிரச்னேகி என்று அழைக்கிறோம்.

முறையாக ஆயுர்வேத பட்டப் படிப்பு படிக்கும் போது, உடல் கூற்றியலையும் நாங்கள் கற்கிறோம். குறிப்பாக ஒவ்வொரு நோயாளியின் ஜீரண சக்தியை ஆய்ந்து, மருந்து தருகிறோம். அதனால், ஒரே மருந்து, ஒரே வகையான, 'டோஸ்' என்பதை விட, உடல்நலத்தின் அம்சங்களை ஆய்ந்து மருந்தைத் தருகிறோம். என்னிடம் ஒவ்வாமை பாதிப்பில் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார். அவருக்கு உடல் முழுவதும், சிவப்பான தடிப்பும், அரிப்பும் ஏற்பட்டு, தொடர்ந்து தொந்தரவு கொடுத்தது. அதற்கான ஆங்கில மருந்து பயன்படுத்தி, அதனால் ஏற்பட்ட வயிறு உபாதையைத் தாங்க, தினமும் 10 பாட்டில் குளிர்பானம் சாப்பிட்டு பழகியிருந்தார். எனவே அவருக்கு, இதுவரை சாப்பிட்டதால் ஏற்பட்ட நச்சை அகற்ற மருந்து கொடுத்து, குளிர்பானம் அருந்தும் மனப் பழக்கத்தை படிப்படியாக நிறுத்தி, தொடர்ந்து மருந்து கொடுத்ததால் முற்றிலும் குணமடைந்தார். ஆஸ்துமா என்பது இன்றைய வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் சிறுவர் முதல், பெரியவர் வரை பாதிக்கும் நோய். இதற்கு சிறந்த முறையில் குணம் அடைய மருத்துவம் செய்ய முடியும். ஆனால், எல்லாவித மருந்துகளையும் பயன்படுத்தி விட்டு, அதற்குப் பின், நம்மிடம் வரும் போது, நோய் முற்றிலும் குணமாக சில மாதங்கள் ஆகும். பாஸ்ட் புட், அளவு கடந்த ஐஸ் கிரீம் சாப்பிடும் பழக்கம் ஆகியவை நல்லதல்ல. எனவே, பாதிக்கப்பட்டவரின் நோய்க்கூறு அறிந்து மருந்து தர வேண்டும். மூட்டுவலி மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு, நல்ல, பக்க விளைவில்லாத மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கிறது. அது பலனைத் தரும் என்பது, ஆங்கில வழி டாக்டர்களுக்கும் தெரியும். ஆனால், ஒரு விஷயம். உணவை அதிகமாகக் குளிர வைத்து உண்பது, சமைத்த உணவை அடுத்தடுத்து சூடுபடுத்தி உண்பது ஆகியவை, ஒருவருக்கு 35 வயதிலேயே மூட்டுவலி வரும் காரணங்களாக அமைகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறை, தோஷங்களை கண்டறிந்து மருந்து தரும் முறை. பொதுவாக, மருத்துவ எண்ணெய் குளியல் அல்லது பிழிச்சல் போன்ற ஆயுர்வேத வைத்தியம், நல்ல பலனைத் தரும்.

உடலில் பித்த வகை பாதிப்பு நோய் என்றால், கஷாய வகைகளையும், கபம் அடிப்படையில் நோய் எனில், தேன் சேர்த்த மருந்துகளையும் குறிப்பிட்ட அடிப்படையில் தந்து, பலன் காணலாம். தற்போது, குழந்தைகள் விரும்பி அருந்தும் வகையில், 'சிரப்' வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகள், குறைந்தது 18 மாதம் வரை தாய்ப்பால் அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் அதைப் பின்பற்றுவர்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !