பாரசிட்டமால் எனும் அபாயம்!
மழை, குளிர் காலங்களில் ப்ளூ, டெங்கு, தொற்று நோய்களின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி. இதற்கு, 'பாரசிட்டமால்' மருந்து பயன்படுத்துவது பொதுவான விஷயமாக உள்ளது. பலர் டாக்டர் அறிவுரை இல்லாமல் அவர்களாக பாரசிட்டமால் மருந்து சாப்பிடுவது உண்டு. குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டால், வழக்கமான விஷயம் தானே என்று முதல் சில நாட்கள் பாரசிட்டமால் தந்து, நிலைமை சரியாகவில்லை என்றால், டாக்டரிடம் அழைத்துச் செல்வோம். அவரும் பாரசிட்டமால் மருந்தை பரிந்துரை செய்தால், அவர் சிபாரிசு செய்த அளவை விடவும் கூடுதலாக தருவதும் உண்டு; காய்ச்சல் குறையவில்லையே என்று அடிக்கடி கொடுப்பதும் வழக்கம்.குழந்தையின் உயரம், எடைக்கு ஏற்ப எவ்வளவு தர வேண்டுமோ, அந்த அளவு தான் தர வேண்டும். அப்படி இல்லாமல் அதிக அளவு தருவதால், கல்லீரலை பாதிக்கிறது. கூடுதல் அளவு மருந்தால் ஏற்பட்ட பாதிப்பில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் தமிழகத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். சற்று ஆறுதலான விஷயம், பாதிப்பை துவக்கத்தில் தெரிந்து சிகிச்சை செய்தால், 90 சதவீதம் குழந்தைகள் குணம் பெறுகின்றனர்.பாரசிட்டமால் மருந்து கண்டுபிடித்து 60 ஆண்டுகள் ஆகிறது. நடைமுறைக்கு வந்த நாள் முதல், பாரசிட்டமால் மருந்து குறித்து பல சர்ச்சை இருக்கும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக பாரசிட்டமால் மருந்தின் பயன்பாடு, பக்க விளைவுகள் குறித்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில், தொடர்ந்து பாரசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவதால், கல்லீரல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் பரிந்துரைத்த அளவுக்கு மேல் மருந்து கொடுப்பதால், கல்லீரலின் உட்புறம் உள்ள மெல்லிய சவ்வில் உள்ள செல்களை அரித்து, அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வில், ஒரு மாதம் - 18 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர். 10 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள், பாரசிட்டமால் நச்சால் பாதிக்கப்படுகின்றனர். 32 சதவீதம் குழந்தைகள், டெங்கு, ப்ளூ, செப்டிசீமியா என்ற ரத்தத் தொற்றுக்கு பாரசிட்டமால் தரும் போது பாதிக்கப்படுகின்றனர். தற்போது தமிழகத்தில் பல குழந்தைகள் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டாக்டரின் சிபாரிசு இல்லாமல், எந்த மருந்தையும் தரவே கூடாது. - எடின்பெர்க் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து, வடமேற்கு ஐரோப்பா