பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்
பற்களின் பயன்கள் என்ன?தாடை எலும்புகளின் பிடிமானத்தில் தான் பற்கள் உள்ளன. பற்கள் இருந்தால் தான், பேசும் சொற்களை நன்கு உச்சரிக்க முடியும். பற்களால் தான், உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். முகத்தில் பற்கள் இருந்தால் தான், அழகாக தெரிவோம்.பற்களை இழப்பதற்கான மூலக்காரணங்கள்?பற்சொத்தை. இப்பாதிப்பு ஏற்பட்டால் சில பற்களை மட்டுமே இழக்க நேரிடும். ஆனால், ஈறு நோய் ஏற்பட்டால், அனைத்துப் பற்களையும் இழக்க நேரிடும். நோய்வாய்ப்பட்ட பற்களால் ஏற்படும் தீமைகள்?ஈறு நோயை கவனிக்காவிட்டால், அந்நோய் முற்றி, ஈறுகளில் சீழ் படிந்துவிடுகிறது. அதனால், சம்பந்தப்பட்ட எலும்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீழ் வடிவதன் மூலம், பற்களில் உள்ள ரத்த நாளங்கள் மூலம், நோய்க்கிருமிகள், உடலின் மற்ற பாகங்களுக்கு சென்று, அவற்றின் இயக்கங்களுக்கு தடையாக உள்ளன.ஈறு பாதிப்பை எவ்வாறு அறிவது?ஈறு நோய் உள்ளவர்கள், அதன் பாதிப்பை தெரிந்து கொள்ள முடியாததால், நோய் முற்றிய பின், மிகவும் பாதிப்படைகின்றனர். ஏனெனில், தொடக்க காலத்தில் ஈறு நோயானது எவ்வித அறிகுறியும் இல்லாமல் வளர்ந்துவரும். வாயில் உருவாகும் நோய்களால் உணவுக்குழலுக்கும் பாதிப்பு ஏற்படுமா?வாயில் உண்டாகும் நோய்கள், உணவுக்குழலையும் பாதிக்கின்றன. தொடர்ந்து நோய்க்கிருமிகளை விழுங்குவதன் மூலம், வயிற்றுப்புண் ஏற்படுவது ஒரு எடுத்துக்காட்டு. பல் பாதிப்பு வந்தால் சிறுநீரகங்கள் பாதிப்படையுமா?நோய் தாக்கிய பல் திசுக்களில் காணப்படும் நுண்ணுயிரிகளை, சிறுநீரக பரிசோதனையில், வளர் பொருள் மூலம் சிறுநீரகங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும். இதன் மூலம் பல் பாதிக்கப்பட்டால், சிறுநீரகங்களும் பாதிப்படையும் என்பது உறுதியாகிறது.எவ்வகை சரும நோய்களுக்கு இப்பாதிப்பு காரணமாகிறது?படை, சிரங்கு, பொடுகு, டீனியா முதலான முக்கிய பல சரும வியாதிகளுக்கு, பல் நோய்கள் காரணமாகின்றன.ஒரு பல் கிருமிகளால் பாதிக்கப்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?பற்கள் பாதிக்கப்பட்டு, அவை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டால், பற்களை உடனே அகற்றிவிடுவது நல்லது. அவற்றால், உடலின் பொதுநலம் பாதிக்கப்படுவதை விட, அதை அகற்றிவிட்டு செயற்கை பல் வைப்பதே நல்லது.செயற்கை பற்கள் யாருக்கெல்லாம் கட்டப்படுகின்றன?மிகவும் பாதிக்கப்பட்ட பல்லை எடுத்துவிட்டு செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. புற்றுநோய் அறுவை சிகிச்சையால் தாடையை இழந்தோருக்கு, செயற்கை பற்களைக் கொண்ட பிளாஸ்டிக் தாடைகள் பொருத்தப்பட்டு, செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. செயற்கை பற்களை உபயோகிப்பவர்களுக்கு மருத்துவரின் அறிவரைகள் என்ன?செயற்கை பற்கள் பொருத்தியவுடன், பிறரோடு பேசும் போது, சிரமமாக இருக்கும். இப்பற்கள் பழகும் வரை, இரவிலும் அணிய வேண்டும்; பழகியவுடன் இரவில் தவிர்த்துவிடலாம். சிகிச்சைக்கு பின், தொடக்க காலத்தில் மென்மையான உணவுகளையே உண்ண வேண்டும். அதே போல் முன்பற்களால் உணவை கடித்து உண்ணும் பழக்கம் கூடாது. காரணம், அப்பற்கள் இடம் மாறி பிடிப்பை இழக்க நேரிடும்.இ.ஜி.ஆர்.சாலமன் பல் மற்றும் ஈறு நோய் சிறப்பு நிபுணர்.தாய்மூகாம்பிகை பல் மருத்துவமனை, சென்னை