உயிர் காக்க முக்கியமானது நேரம்
''மாரடைப்பு, பக்கவாதம், தீக்காயம், விஷம் அருந்துதல், விபத்து பாதிப்புகளுக்கு முதல் ஆறு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது அவசியம். தவறினால் உயிரிழப்போ அல்லது பழைய நிலைக்கு திரும்ப முடியாத சூழலோ ஏற்படலாம். குறிப்பாக பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் ரத்த அடைப்பு ஆகிய பாதிப்புகளில், ரத்தம் உறைந்து கட்டியாகி விடும்,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை, விபத்து, அவசர சிகிச்சை துறை இணை பேராசிரியர் டாக்டர் கவுரிசங்கர்.''இந்த ரத்த கட்டிகளை கரைக்க, 'த்ரோம்போலிடிக்' மருந்துகள் செலுத்த வேண்டும். அவை, ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த மருந்துகளை, பாதிப்பு ஏற்பட்ட முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும். இதிலும் பக்கவாதம் ஏற்பட்டால், முதல் மூன்றரை மணிக்குள் செலுத்த வேண்டும். சிலருக்கு, பக்கவாதம் ஏற்பட்ட சில மணி நேரங்களில், தலையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு வலிப்பு ஏற்படலாம். சுயநினைவு போய் விடும்,'' என்கிறார் டாக்டர் கவுரிசங்கர்.எளிதாக தவிர்க்கலாம் இளம் வயது மாரடைப்பு''25-35 வயதுக்குட்பட்ட பலர் மாரடைப்பு சிகிச்சைக்கு வருகின்றனர். மது, புகைப்பழக்கம், துாக்கமின்மை, உடல் நலனில் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால், இளம் வயதிலே நோயாளிகளாகி விடுகின்றனர். உரிய சிகிச்சை முறைகளையும் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது அறிந்தும், மருந்து சாப்பிடாமல் மெத்தனமாக இருப்போரில் பலருக்கு, 40 வயதுக்கு முன்பே, மாரடைப்பு ஏற்படுகிறது. அனைத்து பாதிப்புகளுக்கும், உயிரிழப்பை தடுக்க, நவீன மருத்துவ முறைகள் வந்துவிட்டன,'' என்கிறார் டாக்டர் கவுரிசங்கர்.