சைனஸ் கோளாறை போக்கும் நீர்க்கோவை மாத்திரை!
சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள, 'சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ' என்பர். அதிலும் மண்டைச் சளி அதாவது, சைனஸ் எனப்படும் பீனிச நோய் -உள்ளவர்கள், மழை, பனிக் காலங்களில் கடும் அவதிப் படுகின்றனர். பனி விழுவது, இடி விழுவது போல இருக்கும். தும்மல், மூக் கடைப்பு, மண்டை பாரம், காதடைப்பு, தலைவலி, புருவம், கன்னங்களில் வலி ஆகியவை படுத்தி எடுக்கும். சிலருக்கு வாசனை தெரியாமல் போவது, துாக்கமின்மையும் ஏற்படும். முகத்தின் எலும்புகளுக்குள் உள்ள காற்றறைகளில் ஏற்படும் நீர்க் கோர்த்தல், அழற்சி, ஒவ்வாமை, கிருமித் தொற்றால் உண்டாகும் நிலையே மண்டை பீனிசம் எனப்படும். சைனஸ் நோயாளிகளில் பலர் ஆவி பிடிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர். மருந்து கடைகளில் விற்கப்படும் பலவித வலி நிவாரணி தைலங்களை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிப்பதால், நன்மையை விட தீமையே அதிகம். இதற்கு பதிலாக, நொச்சித் தைலம், பீனிச தைலம், சுக்குத் தைலம் போன்ற மூலிகைத் தைலங்களை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாலே மண்டைச் சளி நீங்கும்; மூக்கடைப்பு, சளி, காய்ச்சல் பறந்து போகும் மண்டைச் சளியை நீக்கும் மற்றொரு எளிய சித்த மருந்து பற்று போட பயன்படும் நீர்க்கோர்வை மாத்திரை. இரண்டு, மூன்று மாத்திரையை நன்றாக நுணுக்கி, சூடான பாலில் கலந்து நெற்றி, புருவம், கன்னங்களில் பற்று போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு ஒரு வாரம் செய்தால், சைனஸ் காற்றறைகளில் தங்கிய சளி வெளியேறி மூக்கடைப்பு, வலி நீங்கும். உள் மருந்தாக நெல்லிக்காய் லேகியம், தாளிசாதி சூரணம், குங்குமப்பூ மாத்திரை, பலகறை பற்பம், சிவனான் அமிர்தம், கவுரி சிந்தாமணி செந்துாரம், ஆறுமுக செந்துாரம், போன்ற சித்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் பீனிச நோய் குணமாகும். துாதுவளை, துளசி, முசுமுசுக்கை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது, நீர்க் காய்கறிகள், முளைக்கீரை, பசலைக் கீரை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. 'ஏசி'யை மிதமாகவும், சுத்தமாகவும் பயன்படுத்துவது முக்கியம். டாக்டர் மூலிகைமணி அபிராமி, சித்த மருத்துவர்,9003031796, 96000 10696consultabirami@gmail.com