என் 1 என் 1 இன்ப்ளுயன்சா என்ன செய்யும்
'ஸ் வைன் ப்ளு' எனப்படும் என் 1 என் 1 இன்ப்ளுயன்சா வைரஸ், பருவமழைக்கு முன், பருவநிலை மாற்றத்தால் சுவாசத் தொற்று நோயை ஏற்படுத்தும். அக்டோபர், நவம்பரில் வரும் இத்தொற்று முன்கூட்டியே ஆகஸ்டில் உருவாகியுள்ளது.வைரஸ் உருவாகக் காரணம் காற்றின் மூலம் பரவுவதால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, பேசும் போது எச்சில் மற்றவர்கள் மீது பட்டாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருளைத் தொடும்போது வைரஸ் தொற்று பரவுகிறது.ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சுவாசத் துளிகள், சுவாசப்பாதை வழியாக வெளிவரும் சிறிய துகள்கள் மூலம் பரவும். இந்த வைரஸ் 4 வகைகளாக இருந்தாலும் பல வகைகளில் உருமாறுகிறது. அப்போது அதனுடைய தாக்கமும் வீரியமும் அதிகமாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.யாருக்கு பாதிப்பு என் 1 என் 1 தொற்று பருவகால இன்ப்ளுயன்சா அறிகுறிகளை உண்டாக்குகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தலைவலி, உடல்வலி, தசைவலி, அதிக சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். தேவையான மருத்துவ பராமரிப்பும் சரியான ஓய்வும் இருந்தால் குணமடையலாம்.எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும் குழந்தைகளுக்கு சில நேரங்களில் தீவிரமாக மாறக்கூடும். தொடர்ந்து காய்ச்சல் அல்லது சுவாச பிரச்னை இருந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டும்.வயது அதிகரிக்கும் போது நோய் எதிர்ப்புத் திறனில் மாற்றம் எற்படுவதால் முதியோருக்கு பாதிப்பு அதிகரிக்கக் கூடும். கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் இத்தொற்று தீவிரமாகலாம். நீண்ட கால நோய் உள்ளவர்கள், சுவாச பிரச்னை, இதய பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.தடுப்பது எப்படி வெளியே சென்று வந்தால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு கைகளை கழுவுவது அவசியம். இருமல், தும்மலின் போது கர்சீப்பால் மூடி மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வதோடு கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து காற்றோட்டமான சூழலில் வாழ வேண்டும்.இதற்கென தடுப்பூசிகள் உள்ளன. அறிகுறிகள், மற்ற சுவாச பிரச்னைகளைப் போலவே இருப்பதால் டாக்டர் மூலம் ஆய்வகப் பரிசோதனை மூலமே உறுதி செய்ய வேண்டும். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் டாக்டர் ஆலோசனைப்படி 'ஆண்டிவைரல்' மருந்துகளை உட்கொள்ளலாம்.தனிநபர் சுகாதாரம் அவசியம். பாதிக்கப்பட்டவர்கள் நீரிழப்பைத் தவிர்க்க காய்கறிகள், சூப் போன்ற சூடான திரவ உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். வைட்டமின் 'சி' சத்து நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை சாறு பருகலாம்.- டாக்டர் மா. பழனியப்பன்நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை94425 24147