தலையில் அடிபட்டால் என்ன செய்வது?
காரில் நான்கு பேர் பயணம் செய்கின்றனர்; விபத்தை சந்திக்கின்றனர். அவர்களில் ஒருவர் இறந்து விடுகிறார் என்றால், அது மிகப்பெரிய விபத்து தான். உயிர் பிழைத்த மற்றவர்களுக்கு விபத்தின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டியது அவசியம். தலையில் அடிபட்டவுடன் ஒருவர் மயக்கமாகி, அடுத்த ஐந்து நிமிடத்தில், நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னாலும், அதை அலட்சியம் செய்வது கூடாது.சிலர் விபத்து நடந்ததையே மறந்திருப்பர். இதுவும் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்னை தான். குறிப்பாக, தலையில் அடிபட்டவர், அடிக்கடி வாந்தி எடுத்தால், அதை அலட்சியம் செய்யவே கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். அடிபட்டவுடன் வலிப்பு வருவது; மூக்கு, காதில் ரத்தம், நீர் வடிவது: இவையெல்லாம் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்னைகள். சி.டி., ஸ்கேன் செய்வது, நரம்பியல் நிபுணரின் ஆலோசனை பெறுவது கட்டாயம்.லேசாக கதவில், சுவரில் இடித்துக் கொண்டேன் என்று சொல்லி, இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து, தலையில் பெரிய ரத்த உறைவோடு வந்தவர்களும் இருக்கின்றனர். சிலருக்கு ரத்தத்தின் தன்மை அப்படி இருந்தால், தலையில் லேசான காயம் ஏற்பட்டாலும் சில நாட்களுக்கு பின் ரத்த உறைவு ஏற்படலாம்.டாக்டர் விஜய் சங்கரன்நரம்பியல் நிபுணர், சென்னை