உள்ளூர் செய்திகள்

திடீர் இதயச் சாவு ஏற்படுவது ஏன்?

மூளைக்கு ரத்தம் செல்வது குறையும்போது, அது, ஆக்சிஜன் சப்ளை இன்றி அவதிப்படுகிறது. பாதிப்பு அடைந்த நபர், மயக்கம் அடைகிறார். உடனடியாக, 'டீ பைப்ரிலேட்டர்' என்ற கருவி மூலம், இதயத்திற்கு மின் சிகிச்சை கொடுத்து, சீரான செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை எனில், சில நிமிடங்களில், உயிரிழப்பு ஏற்பட்டு விடும். எந்த முன்னெச்சரிக்கையோ, அறி குறியோ இன்றி, இதயம் செயலிழந்து போகும் போது, உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால், திடீர் மரணம் ஏற்படுகிறது. திடீரென இதயம் செயலிழப்பதற்குக் காரணம், இதயத்தின் மின்சாரச் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடு தான். அதை, இதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) எனக் கருதுவதற்கில்லை. இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, ஆக்சிஜனூட்டப்பட்ட ரத்தம், இதயத்திற்குப் போதுமான அளவு செல்லாதபோது, இதயத் திசுக்கள் இறக்கின்றன. அப்போது இதயம் வேலை செய்யாமல் நின்று விடுகிறது. இது தான், இதய அடைப்பு என்றழைக்கப்படுகிறது. ஆனால், இதயச் செயலிழப்பு என்பது வேறு வகையானது.இதயச் செயலிழப்புக்குக் காரணம், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படுவதே. துடிப்புக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் போகும்போது, இதய தசைநார்கள், ஒன்றுக்கொன்று தொடர்பற்றுப் போய், தாறுமாறாகச் சுருங்கி விரிகின்றன. இதை, 'அரித்மியா' என்றும் சொல்கிறோம். இதயத்திற்கு, இயற்கையாகவே, மின்னூட்டத் திறன் உண்டு. இத்திறன் குறைந்து போன, ஆனால், ஆரோக்கியமான நிலையில் உள்ள இதயத்திற்கு, மின்னூட்டம் அளிக்க, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தலாம். இக்கருவி, இதயத்தின் சுருங்கி, விரியும் தன்மையைச் சீராக்குகிறது. மின்னூட்டம் தாறுமாறாக இருக்கும்போது, இதயத்தின் கீழறைகளும், திடீர் விரைப்பு, சுருக்கம் என, மாறுபட்ட நிலையை அடைகின்றன. இதையடுத்து, உடலின் மற்ற பாகங்களுக்கு, ரத்தத்தை வெளியேற்றும் தன்மையை, அவை இழக்கின்றன.மூளைக்கு ரத்தம் செல்வது குறையும்போது, அது, ஆக்சிஜன் சப்ளை இன்றி அவதிப்படுகிறது. பாதிப்பு அடைந்த நபர், மயக்கம் அடைகிறார். உடனடியாக, 'டீ பைப்ரிலேட்டர்' என்ற கருவி மூலம், இதயத்திற்கு மின் சிகிச்சை கொடுத்து, சீரான செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை எனில், சில நிமிடங்களில், உயிரிழப்பு ஏற்பட்டு விடும். இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களில், 70 சதவீதத்தினர், இப்படித் தான் உயிரிழக்கின்றனர்.யார், யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும்?: திடீர் இதயச் செயலிழப்பு, ஆரோக்கியமான தோற்றம் கொண்டவருக்குக் கூட ஏற்படுகிறது. உண்மையில், திடீர் இதயச் செயலிழப்பு, எந்தப் பின்புலமும் இல்லாமல் ஏற்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதயச் செயலிழப்புக்கு, பல காரணங்கள் உள்ளன.முக்கியமான இரண்டு காரணங்கள், இதய அடைப்பு மற்றும் இதய நாள நோய்கள். இவை தவிர, வேறு சில அறிகுறிகள்:* கண்டுபிடிக்க முடியாத காரணங்களால் ஏற்படும், சீரற்ற இதயத் துடிப்பு.* தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட, திடீரென உருவாகிச் சீராகும், அசாதாரணமான, வேகமான இதயத் துடிப்பு.* காரணம் அறியாமல், மயக்கம் ஏற்படுவது.* இதயத்தின் கீழறையிலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைதல். ஒவ்வொரு சுருக்கத்தின்போதும், அறையின் மொத்தக் கொள்ளளவில், 55 சதவீத ரத்தம் வெளியேற்றப் பட வேண்டும். குறைபாடு உள்ளவர்களுக்கு 40 சதவீத அளவே ரத்தம் வெளியேறும். இதை, 'எக்கோ' பரிசோதனை மூலம் அறியலாம்.நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?உங்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரிடம், முழுப் பரிசோதனையும் செய்து, சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.தடுப்பு முறைகள்:ஆரோக்கிய இதயம் வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:* தினமும் உடற்பயிற்சி.* ஆரோக்கியமான உணவு முறை.* உடல் எடையைச் சீராக வைத்திருத்தல்.* புகைப் பிடித்தலை, அறவே தவிர்த்தல்.* இதய நோயை உருவாக்கக் கூடிய நோய்கள், உங்களுக்கு இருக்கிறதா எனக் கண்டுபிடித்து, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டு, கண்காணித்துக் கொள்ளுதல்.(உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய் முதலானவை). வேகமான இதயத் துடிப்பைச் சீராக்க, முன்கூட்டியே சில மாத்திரைகளை உட்கொள்ளலாம். அவை, அடைப்புகளைச் சமாளிக்கும் அல்லது அதிகமாக ஏற்படாதவாறு பாதுகாக்கும் மாத்திரைகள். மருத்துவரின் தீவிர கண்காணிப்புக்குப் பிறகே, எந்த மாத்திரையை உட்கொள்ளலாம் என, அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்களாக மருந்து சாப்பிடக் கூடாது.- டாக்டர் கஹாலி,பி.எம்.பிர்லா மருத்துவமனை, கோல்கட்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !