அபூர்வமான அறுவை சிகிச்சைகள் என்றால் அதை அமெரிக்காவில்தான் செய்யவார்கள் என்றோ, செய்யவேண்டும் என்றோ அவசியமில்லை, நமது மருத்துவர்களுக்கும் அது சாத்தியமே என்பதை துாத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்க்கு மூன்று குழந்தைகள், இரண்டாவது பெண் குழந்தை ஸ்ரீஷாவுக்கு பிறந்ததில் இருந்து நடுவிரலும் மோதிரவிரலும் ஒட்டியே காணப்பட்டது.
இதனால் குழந்தை ஸ்ரீஷா சாப்பிடவும்,எழுதவும்,விளையாடவும் முடியாமல் சிரமப்பட்டாள்.குழந்தை வளர வளர பிரச்னையும் வலியும் அதிகமானது.பொருளாதார வசதியற்ற சுரேஷ் தனது மகளை துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தார், அப்போது குழந்தைக்கு வயது ஐந்து.அரசு மருத்துவர்கள் ராஜ்குமார்,அருணாதேவி,பிரபாகர்,ராஜா ஆகியோர் கொண்ட குழு குழந்தையின் விரல் தன்மையை நன்கு ஆராய்ந்துவிட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.,அதன்படி அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.ஆனாலும் ஸ்ரீஷா மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக எப்போது எழுதி,சாப்பிட்டு,விளையாடி மகிழ்கிறாளோ அப்போதுதான் தங்கள் சிகிச்சையை வெற்றி என்று சொல்லமுடியும் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து இரண்டு வருடமாக காத்திருந்தனர்.தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சையும் பயிற்சியும் தந்து கண்காணித்து வந்தனர்.
எல்லோருடைய முயற்சியும் பிரரர்த்தனையும் பலன்தர, இப்போது ஸ்ரீஷா இயல்பான குழந்தைகயாகிவிட்டாள்.நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தங்களது சிகிச்சை எந்த அளவிற்கு வெற்றிகரமாக பலனளித்தது என்பதைக் காட்டும் விதத்தில் ஸ்ரீஷாவிற்கு பிஸ்கட் தர அதை அவள் அழகாக பிரித்து ஒவ்வொன்றாக சந்தோஷமாக சாப்பிட, பார்த்தவர்களுக்கு மனம் இனித்தது.அரசு மருத்துவமனையின் புகழை உயர்த்திய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.-எல்.முருகராஜ்