UPDATED : ஆக 27, 2026 07:01 PM | ADDED : ஆக 27, 2026 06:58 PM
இயற்கையின் பெருஞ்சீற்றத்திற்கு முன்னால் மனித சக்தி எவ்வளவு சிறியது என்பதை இமாலயச் சிகரங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கின்றன. நேபாள நாட்டின் வடக்கே அமைந்த ரசுவா பகுதியில், கோஷி ஆற்றுப் படுகையில் திடீரென ஏற்பட்ட அந்தப் பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் சுடுகாடாக்கிவிட்டன.எங்கு பார்த்தாலும் வீடுகளை விழுங்கிவிட்டு நிற்கும சேற்று மண் குவியல்களும், சடலங்கள் போல ஆங்காங்கே மிதந்து செல்லும் சமையல் எரிவாயு சிலிண்டர்களும்,வீட்டு உபயோகப் பொருட்களும், பெருந்துயரத்தின் சாட்சியங்களாகக் காட்சியளிக்கின்றன. வீடுகளின் கூரைகள் மட்டும் வெளியே தெரிய, ஊரே சகதிக் காடாக மாறிக் கிடக்கிறது. நீரிலும் சேற்றிலும் பாதியளவு புதைந்து கிடக்கும் வாகனங்களின் குவியல்கள், நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவின் கோரத்தை சொல்லி அழுகின்றன. நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், எண்ணற்றோரைக் காணாமல் போயுள்ளனர்,உறவுகளையும் நட்புகளையும் தேடும் படலம் தொடர்கிறது,ராணுவ முகாமில் பெற்றோர்களை இழந்து தஞ்சமடைந்த சிறுவர்களின் அழுகுரலில் உள்ள அவலத்தை காணமுடியவில்லை, இந்தச் சூழலில், அந்தப் பகுதியே அபாயக் குரலெழுப்புகிறது.இந்த இடிபாடுகளுக்கு இடையே, கயிலாய பயணம் மேற்கொண்ட ஈஷா மையத்தின் 80 பேர் கொண்ட பக்தர்கள் குழுவும் இயற்கைச் சீற்றத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.'நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்...' என்ற அந்த ஒரே ஒரு வார்த்தையைக் கேட்கக் கடந்த இரண்டு நாட்களாகக் கோவை ஈஷா யோகா மையத்தின் ஒட்டுமொத்தப் பிராணனும் தவித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ சவால்களையும் விமர்சனங்களையும் கண்டு அசராதவர், கோடி மனங்களுக்கு அமைதியை போதிக்கும் ஆன்மீக குரு சத்குரு. ஆனால், தன் பிள்ளைகளைப் போல நேசித்து அனுப்பி வைத்த பக்தர்களின் தகவல் ஏதும் கிடைக்காமல், சத்குருவின் கண்கள் கசிந்து கலங்குவதைக் கண்டு சீடர்களும் அடியார்களுமே உறைந்து போயுள்ளனர்.கேவல்களும் அழுகுரல்களுமே மிஞ்சியிருக்கிறது.மின்சார அமைப்புகளும் சாலைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதுடன், தொலைத்தொடர்புகளும் அற்றுப்போய்விட்டன. ராணுவ மீட்புக் குழுவினர் ஒருபுறம் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தாலும், இடிபாடுகளின் மௌனம் இதயத்தை அடைக்கிறது. 'அவர்கள் நலமாக இருக்கிறார்கள்' என்ற செய்தி வராதா என நொடிக்கு நொடி ஏங்கித் தவிக்கும் ஒவ்வொரு இதயமும் கேட்கும் ஒரே கேள்வி — 'அந்தப் பனிமலையிலிருந்து ஒரு குரல் கேட்காதா?'பேரிடரின் துயரத்தை விடவும், தொடர்பில்லாத இந்த மௌனம் தரும் வலி மிகவும் கொடுமையானது. சேற்றுச் சகதிக்கு நடுவே சிக்கியுள்ள அந்த நல்லுள்ளங்கள், அனைத்துத் தடைகளையும் தாண்டி மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு ஒட்டுமொத்தத் தேசமும் பிரார்த்தனையில் உறைந்திருக்கிறது.-எல்.முருகராஜ்