நேர்மை, எளிமை, தூய்மையின் அடையாளம்
ஓ.பி.ராமசாமி01.2.1895 - 25.8.1970, ஓமந்தூர், திண்டிவனம்அவர் ஒரு விவசாயி. வேளாண் தொழிலில் அதிக அக்கறை கொண்டவர். அதனால், விவசாய புள்ளிவிவரங்களும் நுட்பங்களும் அவருக்கு அத்துபடி. அப்படிப்பட்ட ஒருவர் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஆனார். கிணறு வெட்ட மானியம், தரவாரியாக நெல்லுக்கு விலை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சாலை ஓரங்களில் மரங்கள் எனப் பெருமைக்குரிய திட்டங்கள் தீட்டி மாகாணம் செழிப்படையக் காரணமானார் ஓ.பி.ராமசாமி. திண்டிவனம் வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்து, காந்தியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, மிக இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு. நேர்மையும் எளிமையும் தூய்மையும் அவரிடம் இருந்ததால் கட்சித் தலைவர் + முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. முந்தைய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் இணைந்து, முதல்வர் நாற்காலியில் ஓ.பி.ராமசாமியை அமர வைத்தனர். பதவிக் காலத்தில் தனது அதிகாரத்தை வைத்து தன் குடும்பத்துக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எந்த விதச் சலுகையும் வழங்காமல் நேர்மையான ஆட்சியை (1947 மார்ச் 23 முதல் 1949 ஏப்ரல் 6 வரை) வழங்கினார். ஜமீன்தார் முறை ஒழிப்பு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை, பூரண மதுவிலக்கு போன்றவற்றை அமல்படுத்தினார். நேர்மைக்குப் பரிசாக பலரும் நெருக்கடிகள் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் பதவி விலக நேர்ந்தபோது, துளியும் கவலையின்றி துணிச்சலாகப் பதவியைத் துறந்தார் ஓமந்தூரார் பதவியிலிருந்து விலகி, அரசியல் வாழ்வைத் துறந்து, மீண்டும் விவசாயியாக மாறி, வடலூரில் தரிசாகக் கிடந்த பூர்வீக நிலங்களை விளைநிலங்களாக மாற்றினார். வள்ளலார் குருகுலப் பள்ளி, அநாதைகள் ஏழை மாணவர் இல்லம் போன்ற நிறுவனங்களையும் வடலூரில் ஏற்படுத்தி உதவினார். வாழ்வின் இறுதி மூச்சு வரை எளிமையையும், தூய்மையும் கடைப்பிடித்த மக்கள் தலைவர் ஓ.பி.ஆர். புகழ் காலம் கடந்து பேசப்படும்.சிறப்புகள்2010 : மத்திய அரசால் தபால்தலை வெளியிடப்பட்டது. 2013 : ஓமந்தூரில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.2018 : இவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முடிவு