உள்ளூர் செய்திகள்

அக்கில்லஸும் நளனும்...

அக்கில்லஸ்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற கவிஞர் ஹோமர் எழுதிய காப்பியம் 'இலியட்'. அதில் வரும் வீரன்தான் அக்கில்லஸ். தெட்டிஸ் (Thetis) என்னும் கடற் கன்னியின் மகன். அவன் குழந்தையாக இருந்தபோதே அவனை ஸ்டிக்ஸ் (Styx) ஆற்றின் மந்திர நீரில் முக்கி எடுத்தாள் தெட்டிஸ். அந்த ஆற்றில் நனைந்த உடல் பகுதியில் காயமே ஏற்படாதாம். தெட்டிஸ் அவனைத் தலை கீழாகப் பிடித்துக் கொண்டு ஆற்றில் அழுத்தி எடுத்ததில் அக்கில்லஸின் குதிகால் பகுதி மட்டும் நனையவில்லை. இந்த உண்மையை அப்போலோ (Appolo) தெய்வத்தின் மூலமாகத் தெரிந்துகொண்ட பாரிஸ் என்னும் வீரன் அக்கில்லஸ்ஸை குதிகாலில் படுமாறு அம்பு எய்து கொன்றான். குதிகால் பற்றி கிரேக்கக் கதையில் மட்டுமா இருக்கும்? இந்திய புராணக் கதைகளிலும் இருக்கிறது. நளன், தமயந்தி தம்பதி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நளனும் இப்படித்தான். எப்போதும் சுத்தமாகவே இருக்கும் நளன், ஒரு தடவை கால் கழுவும்போது குதிகால் பகுதியை சரியாகக் கழுவாமல் விடுகிறான். அந்த இடத்தில் குடியேறிய சனி அவனைப் படிப்படியாக வியாபிக்கிறது. நளன் நாடு நகரங்களை இழக்கிறான். மனைவி தமயந்தியைப் பிரிகிறான் எனக் கதை நீள்கிறது.கேட்பதற்குச் சுவையாக இருக்கும் இந்தக் கதைகள், உள்ளங்கால் முதல் உச்சி வரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்னும் உண்மையை விளக்குகின்றன அல்லவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !