உள்ளூர் செய்திகள்

மக்களால் மக்களுக்காக...

அனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy) செப்டம்பர் 15மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பார்கள். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்கிற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு 'மக்கள்' என்றும் கிராட்டோஸ் என்பதற்கு 'அதிகாரம்' அல்லது 'ஆட்சி' என்றும் பொருள்.தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துகளைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தனிக் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி செய்வார்கள். மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்கலாம். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இந்த மக்களாட்சி நடைபெற்றது. மறைமுக மக்களாட்சி முறையில், மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கம் நடத்துகிறார்கள். “மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்' என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும் “மக்களால் மக்களுக்காக மக்களால் செய்யப்படும் ஆட்சியே மக்களாட்சி” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனும் கூறியிருக்கிறார்கள்.இதுபோல மக்களாட்சிக்கான விளக்கம் அழகாக இருந்தாலும், ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மாறிவிடுவது ஜனநாயக நாடுகளில் பொதுவாகக் காணக்கூடிய நடைமுறையாக இருக்கிறது.* மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்க ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. * பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !