வரலாற்றை வாசிப்போம், வாங்க!
தமிழகத்தில் 'கீழடி' என்ற இடத்தில் பூமியைத் தோண்டத் தொடங்கியதில், ஒரு முக்கியமான நன்மை ஏற்பட்டது. 'வரலாறு' என்ற துறையின் மீது கவனம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவும் 'அகழாய்வு' மீது மக்கள் பார்வை திரும்பியுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பல முடிவுகள் எட்டப்படுகின்றன. அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுகின்றன. 'தொல்லியல்', 'அகழாய்வு', 'அகழ்வாராய்ச்சி', 'கி.மு.', 'கி.பி.', 'பொது ஆண்டு', 'தமிழர் நாகரிகம்', போன்ற ஏராளமான சொற்கள் நம் அன்றாடப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதுநாள் வரை, கவனமே பெறாமல் இருந்த இத்துறை அறிஞர்கள், இப்போது வெளியே தெரிகிறார்கள். இவர்கள் பேசும்போது தான், அகழாய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அணுகுமுறை மாற்றங்கள் ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சத்தமே இல்லாமல் சாதனை படைத்துவரும் துறையாக மிளிர்கிறது 'அகழாய்வு.' அதைக் கெளரவிக்கும் விதமாக, இவ்விதழ் 'தோண்டத் தோண்ட வரலாறு' சிறப்பிதழாக மலர்கிறது.உலக அளவில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தொடங்கி, இந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்று வந்துள்ள முயற்சிகளை இவ்விதழில் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.