உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி.1. இரயில் கடக்கும்போது அதனுடைய எடையை பாலம் எவ்வாறு தாங்குகிறது?செ.பிரவின், 9ஆம் வகுப்பு, காளையார் கோவில்.பாலத்தின் மீது பொருளில்லா சுமை (Dead load) எல்லா நேரத்திலும் இருக்கும். இரயில் அல்லது வேறு வாகனங்கள் செல்லும்போது பாலத்தின் மீது ஏற்படுவது இயங்கு சுமை (live load). இந்த இரண்டையும் தாங்கும்படிதான் பாலங்களை வடிவமைக்கிறார்கள். அதிகபட்சமாக அந்தப் பாலத்தின் மீது செல்லும் வாகனங்களின் மொத்த எடையை, பொருளில்லா சுமையோடு கூட்டி பாலத்தின் இயங்கு சுமையை வடிவமைக்கிறார்கள். எனவேதான், இரண்டு வாகனங்களுக்குக் கூடுதலாகச் செல்லக்கூடாது என்கிற எச்சரிக்கைப் பலகையை சில பாலங்களில் பார்க்க முடியும். சிறு ஓடையின் குறுக்கே ஒரு மரத்தைக் கிடத்திப் பாலம் கட்டுகிறோம் எனக் கொள்வோம். மரத்தின் எடையையும் ஏறிக் கடக்கும் ஆட்களின் எடையையும் தாங்கும் அளவுக்கு, இருபுறமுமுள்ள நிலப்பகுதி வலுவாக இருக்கவேண்டும். இரயில், ஆறு போன்ற நீண்ட இடைவெளியைக் கடந்து செல்ல கமான் பாலம் (Arch bridge) போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவார்கள். இதில் பாலத்தின் தூண்கள் ஆழமாகப் பதிக்கப்பட்டு இருக்கும். இரண்டு தூண்களுக்கு இடையே உள்ள பளுவை அந்தத் தூண்கள் தாங்குமாறு வடிவமைப்பு செய்து இருப்பார்கள். அதுபோல தொங்கு பாலத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் கயிறு, அந்த எடையைத் தாங்கும் வலிமை கொண்டது.2. நம் உள்ளங்கால், உள்ளங்கையில் முடிகள் இல்லை. ஆனாலும் அந்த இடங்களில் வியர்ப்பது எப்படி? சு.செ.திவ்யாலட்சுமி, 12ஆம் வகுப்பு, அருணா மெட்ரிக் பள்ளி, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம்.இவ்வாறு வியர்க்க சுரப்பிகளே காரணம்.மூன்று வகைச் சுரப்பிகள் உள்ளன:1. மயிர்க் கால்களின் கீழே உள்ள அப்போக்கிரைன் (Apocrine) வியர்வைச் சுரப்பிகள்2. உதடுகள் போன்ற சில பகுதிகளைத் தவிர்த்து உடல் முழுவதும் பரவியுள்ள எக்கிரைன் (Eccrine) வியர்வை வெளியேற்றும் சுரப்பிகள்3. அக்குள் போன்ற பகுதிகளில் அமைந்திருக்கும் அப்போஎக்கிரைன் (Apoeccrine glands) சுரப்பிகள் இது தவிர, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற மயிர்க் கால்கள் இல்லாத இடத்திலும் எக்கிரைன் (Eccrine) சுரப்பிகள் இருக்கின்றன. உள்ளங்கைகளில் சதுர சென்டிமீட்டருக்கு 370 வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. கையின் பின்புறமோ வெறும் 200தான். நெற்றியில் வியர்வைச் சுரப்பிகளின் செறிவு சதுர சென்டிமீட்டருக்கு 175, வயிறு போன்ற பகுதிகளில் 155, முதுகு, கால்கள் போன்ற பகுதிகளில் 60-80 என்று அமைந்துள்ளன.3. மழையில் நனைந்தால் சளி பிடிப்பது ஏன்? தண்ணீருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?ர.பிரவின்புதா, 6ஆம் வகுப்பு, பாரத தேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி, மதகடிப்பட்டு, புதுவை.வசந்தகாலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும்; இலையுதிர் காலத்தில் சில மரங்கள் தமது இலையை உதிர்த்து மொட்டையாகிவிடும். அதுபோல, மழைக்காலத்தில் நாம் அருந்தும் நீர் முதற்கொண்டு பல்வேறு வகையில் கிருமிகள் பெருகி நமது உடலை வந்து அடையும். இதனால், மழைக்காலத்தில் சளி மட்டுமல்லாமல், காலரா போன்ற நோய்களும் அதிகரிக்கின்றன. “காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை” என்று சொல்வதுபோல, இதையும் நாம் தவறாக விளங்கிக்கொண்டு மழையால் சளிப் பிடிக்கிறது என தவறாகக் கருதிவிடுகிறோம். மேலே சொன்னது சரியெனில், மழையில் நனைவது போல ஷவரில் குளித்தாலும் சளிப் பிடிக்க வேண்டுமே! ஆகவே, சளிப் பிடிக்க நேரடியாக மழை காரணம் அல்ல; மழைக்காலமே காரணம்.4. கடலுக்குப் புவியீர்ப்பு சக்தி இருக்கிறதா? இருந்தால் அது மீன்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது?மோ. ஜஸ்வந்திகா, ஏ.வி.பி.மெட்ரிக். பள்ளி, கோவை.நிறை உடைய எல்லாப் பொருட்களுக்கும் அதன் நிறைக்கு ஏற்ப ஈர்ப்பு ஆற்றல் உண்டு. இது பூமிக்கு மட்டும் உடைய குணம் அல்ல. மற்ற கோள்கள், ஏன் நமக்கும்கூட ஈர்ப்பு ஆற்றல் உண்டு. பூமியின் எடை 6க்குப் பிறகு இருபத்திநான்கு தடவை பூஜ்ஜியம் போட்டால் வருகிற எடை. எனவே, நம்மைவிடப் பலமடங்கு கூடுதல் ஈர்ப்பு விசை பூமிக்கு உண்டு. அதனால் தான், நமது ஈர்ப்பு விசை கடலில் கரைத்த பெருங்காயம்போல கண்ணுக்குத் தெரிவதில்லை. பூமியின் மேலுள்ள எல்லாவற்றின் மீதும் பூமியின் ஈர்ப்பு விசை உள்ளது. கடலில் நீந்தும் மீன், காற்றில் மிதக்கும் பறவை, நிலத்தில் நடக்கும் விலங்கு, மண்ணுக்குள் ஊரும் மண்புழு என, எல்லாவற்றையும் புவியீர்ப்பு விசை கவர்ந்து வைத்துள்ளது. எனவேதான், தன்னைத் தானே நொடிக்கு அரை கிலோமீட்டர் வேகத்தில் சுழலும் பூமியிலிருந்து பொருட்கள் வெளியே தெறித்துப் போவதில்லை. கடலில் நீந்தும் மீன், நீர் ஆகிய இரண்டின் மீதும் புவியீர்ப்பு விசை இருப்பதால்தான் சுழலும் பூமியிலிருந்து அவை வெளியே விழுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !