பயமறியாத தியாகி!
பகத்சிங் 28.9.1907 - 23.3.1931 லயால்பூர், பஞ்சாப்'புரட்சி என்பது மனித சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஓர் அங்கம். சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனின் பிறப்புரிமை. அதை யாரும் தடுக்கமுடியாது' என்று சிறைக் கம்பிகளுக்குள் நின்று பிரிட்டிஷாருக்குப் பாடம் புகட்டிய பகத்சிங் தீவிரவாதி அல்ல; ஒரு புரட்சியாளர். தூக்குமேடையில் நின்றுகொண்டு, 'எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டே இருப்போம்' என வீராவேசமான வார்த்தைகளோடு 'இன்குலாப் ஜிந்தாபாத்' (போராடுவோம் வெற்றிபெறுவோம்) என்று முழங்கினார். இவரது தந்தை, மாமா ஆகியோர் விடுதலைப் போராட்ட வீரர்கள். எனவே, பகத்சிங்கும் இயல்பிலேயே புரட்சியாளராக இருந்தார். பள்ளிப் பாடங்களைவிட சமூக நிகழ்வுகளே அவரது உள்ளத்தில் அதிகம் பதிந்தன. அதனால், 14வது வயதில் தயக்கம் ஏதுமின்றி விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, பிரிட்டிஷ் அரசு வழங்கிய பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தீயில் எறிந்தார். விடுதலைப் போரில் முழுமையாகப் பங்கெடுக்க எண்ணி, காந்திய வழிப் போராட்டத்தைக் கைவிட்டு இளம் புரட்சியாளர் இயக்கத்தில் இணைந்தார் பகத்சிங். தேச விடுதலையே தன் முதல் பணி என்றுகூறி வீட்டை விட்டும் வெளியேறியது அந்த இளஞ்சிங்கம்.நண்பர்களுடன் இணைந்து 'நவஜவான் பாரத சபா'வை 1926இல் நிறுவினார். விடுதலைக்குப் பின்னர் சமநீதி சமுதாயம் அமைய வேண்டும், மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் ஒழிய வேண்டும் என்றார். 'புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக' என்று குரல் கொடுத்துக்கொண்டே குண்டுகளை வீசி நண்பர்களுடன் சரணடைந்தார்.பயமறியாத பகத்சிங் தூக்கு மேடைக்குச் செல்லும்போது, 'நாட்டுக்காக உயிர் துறக்கிறோம்' என்று கூறிப் பெருமையுடன் நடந்தார். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியிருந்தாலும் வீரத்தின் குறியீடாக இருக்கும் பகத்சிங் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.