உள்ளூர் செய்திகள்

சரியாக எடை போடு!

காய்கறி, மளிகைப் பொருள் வாங்க பெரியவர்களுடனோ, தனியாகவோ கடைக்குப் போய் இருப்பீர்கள். நாம் வாங்கும் பொருளை கடைக்காரர் தராசில் வைத்து ஒருபுறம் எடைக்கல்லை வைப்பார். தராசின் தட்டுகள் மேலும், கீழுமாக அசையும். எடை அதிகமாக இருந்தால் பொருள் உள்ள தட்டு கீழிறங்கி இருக்கும். கொஞ்சம் பொருளை கடைக்காரர் எடுத்து விடுவார். எடை குறைவாக இருந்தால், எடைக்கல் உள்ள தட்டு கீழிறங்கி இருக்கும். தராசின் மேற்பகுதியில் உள்ள நடுப்பகுதியில் ஒரு முள் இருக்கும். அசைந்து கொண்டிருக்கும் அந்த முள் சமமாக நடுவில் நின்றதும், எடை சரியாக உள்ளது என்று பொருள். பிறகு கடைக்காரரிடமிருந்து பொருட்களை நாம் வாங்கிக் கொள்கிறோம்.பொருட்களின் எடையை சரியாக அளவிட தராசு பயன்படுகிறது. தராசை 'துலாக்கோல்' என்று சொல்வார்கள். 'தராசு' என்பது பாரசீக மொழிச்சொல். பெரும்பாலும் இரண்டு தட்டுகள் உள்ள தராசே பயன்படுத்தப்படுகிறது. எடைக் கற்களைக் கொண்டு பொருட்கள் அளக்கப்படுகின்றன. சமமான எடையுள்ள இரண்டு தட்டுக்களை துலாக்கோல் மூலம் தாங்கும் வடிவில் இது அமைந்திருக்கும். ஒரு பக்கம் மறுபக்கத்தால் சமன் செய்யப்படுவதால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பொருள் இழுக்கப்படாது. எனவே அளக்கப்படுகிற பொருளின் எடை சரியானதாக இருக்கும். காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், நகைகள் என பல பொருட்களை எடை போட்டு வாங்குகிறோம். அதன் அடிப்படையில் விலையைக் கணக்கிட்டு கொடுக்கிறோம். வெவ்வேறு பொருட்களை அளக்க தனித்தனியான தராசுக் கருவிகள் உள்ளன. பொருட்களின் எடைகளைத் துல்லியமாகக் கணிக்கிற மின்னணு தராசுகளும் இருக்கின்றன. பல்பொருள் அங்காடி, நகைக்கடைகள் போன்ற இடங்களில் நீங்கள் இவற்றைப் பார்த்திருக்கலாம். அடுத்தமுறை காய்கறி வாங்கச் செல்லும்போது தராசு எப்படிச் செயல்படுகிறது என்று மறக்காமல் கவனித்துப் பாருங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !