நான் யார்?
என்னை, 'நோய்த் தடுப்பூசிகளின் தந்தை' என்பார்கள்! இங்கிலாந்தில் உள்ள பெர்க்லி என்னும் ஊரில் பிறந்து, சகோதரிகளின் ஆதரவில் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மருத்துவத் துறையில் அதிகம் ஆர்வம் இருந்தது. நோய்கள் எல்லாம் இயற்கையின் எதிரிகளாக எனக்குத் தெரிந்தன. ஆகவே, 'ஒரு மருத்துவராகி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்' என்று முடிவெடுத்தேன். 'டேனியல் லட்லாவ்' என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று அறுவைச் சிகிச்சை நிபுணராகத் தேர்ச்சி பெற்றேன். லண்டனில் தூய ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு அறுவைச் சிகிச்சையாளராகவும் 1770ல் பணியாற்றினேன். மாரடைப்பு பற்றி முதன் முதலில் ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் என்னையே சேரும். பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி மருந்தை 20 ஆண்டு கால முயற்சிக்குப் பின் 1796ல் கண்டுபிடித்து வெற்றி பெற்றேன். மேலும் பல ஆய்வுகள் செய்து அம்மை நோய் பற்றிய ஆய்வு நூலையும் வெளியிட்டேன். எனக்கு முன்பாகவே பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்தை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், ப்ளெட் ஆகியோர் கண்டுபிடித்து இருந்தனர். ஆனால், என்னுடைய ஆராய்ச்சி முடிவுதான் விளக்கத்துடன் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 'ஃபிரான்சிஸ்கோ ஜாவியர் டி பால்மிஸ்' என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் கண்டறிந்த தடுப்பூசி மூலமாக பெரியம்மை நோயை ஒழித்தார். இதனால், என் புகழ் உலகம் எங்கும் பரவியது.தேசிய தடுப்பூசிக் கழகத்தை 1808ஆம் ஆண்டு தோற்றுவித்தேன். என் கண்டுபிடிப்புக்குப் பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் கிடைத்தன. மருத்துவ உலகில் என் பங்களிப்பு மிக உன்னதமானது என்று பலரும் சொல்கிறார்கள்!எட்வர்டு ஜென்னர்பிறப்பு: 17 மே, 1749மறைவு: 26 ஜனவரி,1823