UPDATED : ஆக 23, 2024 07:23 PM | ADDED : ஆக 23, 2024 07:20 PM
நாங்கிராணி திருவிழா என்பது மகராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரிக்கே உரித்தான விசேட விழாவாகும்.அங்குள்ள விவசாயிகள் தத்தம் மாடுகளுடன் சேறும் சகதியுமான தங்கள் நிலத்தில் மாடுகளை வேகமாக ஒட்டிச் செல்லும் விழாவே நாங்கிராணி விழாவாகும்.
ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மார்கதம்ஹானே கிராமத்தில் நடைபெறும் இந்த நாங்கிராணி திருவிழாவின் சுவராசியம் காரணமாக, உலகின் பல பாகங்களிலும் இருந்தும் பார்வையாளர்கள் திரள்கின்றனர்.
இது ஒரு பந்தயம் போலத்தான் நடைபெறுகிறது.மாடுகள் அதன தரவரிசைப்படி பிரிக்கப்பட்டு முதலில் வயலில் நடந்து சென்று வயலுக்கு பழக்கமாகிக் கொள்கின்றன.அதன்பின் விவசாயிகளின் சொடுக்குதலுக்கு ஏற்ப வேகமெடுத்து நான்கு கால் பாய்ச்சலில் பாய்கின்றன.
மாடுகளின் பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாத விவசாய வீரர்கள் பலர் அந்த சேற்றில் விழுந்து புரண்டு எழுகின்றனர்.சில மாடுகள் பந்தயப்பாதையை விட்டு வேலியைத்தாண்டிச் செல்கின்றன,சில மாடுகள் பந்தய எல்லை முடிந்தபிறகும் சீறிப்பாய்கின்றன இதன் காரணமாக நாங்கிராணி போட்டியானது மெய்சிலிர்க்கச் செய்கிறது.
இந்த வருடத்திற்கான இந்தப் போட்டி இன்று நடந்தது.-எல்.முருகராஜ்