UPDATED : ஏப் 18, 2024 05:41 PM | ADDED : ஏப் 18, 2024 03:02 PM
சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் அமைப்பானது சுமார் 2 ஆயிரம் புகைப்படக் கலைஞர்களை உறுப்பினர்களைக் கொண்டதாகும்.உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.இது இவர்களின் பத்தாவது கண்காட்சியாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களுடன் ஆரம்பித்த இந்த அமைப்பு இது வரை 903 புகைப்பட நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அமைப்பின் சார்பில் சென்னைக்குள் மட்டுமின்றி காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்ததுடன் மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர்.
கண்காட்சியில் பல சுவராசியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.அமைப்பில் புதிதாக உறுப்பினர்களானவர்களுக்கு தனி தனி சுவர்கள் வழங்கப்பட்டு அவர்களது ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் அந்த சுவர்களிடம் இடம் பெற வாய்ப்பும் தரப்பட்டுள்ளது இது புதியவர்களை ஊக்குவிக்கும். அமைப்பின் சிறந்த முயற்சியாக பார்வையாளர்கள் பராட்டுகின்றனர்.முகங்கள்,ஒளி,கடற்கரை என்பது போன்ற தலைப்புகளில் ஒரு மாதம் எடுத்து முப்பதிற்கும் அதிகமான படங்களை தொகுத்து வைத்துள்ளனர், வித்தியாசமாக உள்ளது.அதே போல சிற்பங்களுக்கு உயிர்வந்தால் என்னவாகும் என்ற கற்பனையில் வைத்துள்ள படங்களும் நன்றாக உள்ளது.
பெட்டக்குறும்பர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ரவிக்குமார் 'என் யப்பி மேதி' (அவரது பழங்குடியின மொழியில் 'என் அம்மா மேதி' என்பது பொருளாகும்.)என்ற தலைப்பில் தனது அம்மாவைப் பற்றி எடுத்த புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார்.
கண்காட்சியை காணவந்தவர்கள் தங்களது மற்றும் தாங்கள் எடுத்த போஸ்ட் கார்டு சைஸ் படங்களை ஒரு இடத்தில் கொலாஜ் போல வைத்துள்ளனர் அதுவும் அழகாக உள்ளது.கண்காட்சியை சுற்றிக் காண்பிக்கவும் அது குறித்து விளக்கம் தரவும் ராம்குமார் அழகுமலை என்பவர் அங்குள்ளார்.இந்த புகைப்பட கண்காட்சி வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பார்வையாளர்களுக்கான நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை அனுமதி இலவசம் --எல்.முருகராஜ்