உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / செழியனின் உலக சினிமா..

செழியனின் உலக சினிமா..

செழியன் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான திரைப்பட ஒளிப்பதிவாளர்,இயக்குனர்.அவருக்குள் ஒரு எழுத்தாளரும் ஒளிந்து கொண்டுள்ளார் அதை அவரே அடையாளம் கண்டு அவ்வப்போது சிறுகதை,கட்டுரை வாயிலாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திவந்தார்.செழியனுக்கு சினிமாதான் எல்லாமே.சினிமாவில் காலடி எடுத்துவைத்த காலத்தில் அதைப் புரிந்து கொள்வதற்காக தேடி தேடி உலக சினிமாக்களை பார்த்துள்ளார்.அதை அவர் புரிந்து கொண்ட விதத்தை ஆனந்த விகடனில் தொடர்கட்டுரையாக 'உலக சினிமா' என்ற தலைப்பில் 93 வாரங்களாக எழுதிவந்தார்.அவரது எழுத்து நடையும் அதில் உள்ள எதார்த்தமும் எல்லோருக்கும் பிடித்துப் போனது, தொடர் முடிந்ததும் புத்தகமாகவும் வெளிவந்தது.எடையிலும் விலையிலும் கனமான அந்த புத்தகத்தை மலிவு விலையில் மக்கள் பதிப்பாக சீர் வாசகர் வட்டத்தினர் கொண்டு வந்துள்ளனர்,ஆம் 760 பக்கம் கொண்டு மிகத்தரமாக தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகம் வெறும் 200 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.மக்கள் பதிப்பாக வந்துள்ள உலக சினிமா புத்தக வெளியீட்டு விழா கடந்த 15/12/2024 ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.விழாவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம்,ஓவியர் டிராட்ஸ்கி மருது,படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத்,இயக்குனர் பாலாஜி சக்திவேல்,எழுத்தாளர் கண்ணன் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.வாசகர்கள் வருகையால் அரங்கம் மட்டுமின்றி டிஸ்கவரி புக்பேலஸ் பார்கிங் பகுதி கூட நிரம்பிவழிந்தது,வந்தவர்கள் அனைவரையும் டிஸ்கவரி வேடியப்பன் வரவேற்றார்.எழுத்தைப் போலவே செழியனின் ஏற்புரையும் எளிமையாக,இனிமையாக இருந்தது.இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த சீர் வாசகர் வட்டம் கவிஞர் தம்பியை பாராட்டியே ஆக வேண்டும்.இத்தணை சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தாலும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் குறித்த நேரத்தில் விழாவினை ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடித்தார்.அவர் பேசுகையில் சொன்ன குறிப்புகள் பல சுவராசியமானவை.இந்த புத்தகத்தை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக முயற்சிகள் எடுத்த போது பலரும் கைகொடுத்ததால்தான் இந்த விலைக்கு கொடுக்கமுடிகிறது என்றார்.இளம் வாசகர்களை புத்தக வாசிப்பிர்க்கு உள்ளாக்கவேண்டும் என்பதற்காக இரண்டு பள்ளி மாணவர்களை மேடையேற்றி அவர்கள் புத்தகம் பெற ஏற்பாடு செய்திருந்தார்.சில சினிமாக்களில் வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது கொடுத்த காசுக்கு இந்த ஒரு சீன் போதும் என்று பாராட்டி சொல்வது உண்டு, அது போல இந்த புத்தகத்தை புரட்டும் போது முன்னுரையாக செழியன் எழுதியுள்ள 18 பக்கங்களே கொடுத்த காசுக்கு செல்லுபடியாகும் எனச் சொல்லத் தோன்றியது...-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை