UPDATED : டிச 21, 2024 03:28 PM | ADDED : டிச 21, 2024 03:01 PM
பெண் புகைப்படக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது.புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சென்னை போட்டோ பினாலே (சிபிபி)என்ற அமைப்பு சென்னை லலித் கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சியினை நடத்திவருகின்றனர்.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள பெண் புகைப்படக்கலைஞர்கள் மட்டுமின்றி ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,லண்டன்,பிரான்ஸ் மற்றும் பாலஸ்தீனம் உள்ளீட்ட நாடுகளில் சமூகம் சார்ந்து இயங்கக்கூடிய பெண் புகைப்படக் கலைஞர்கள், தாங்கள் பார்த்த பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை படமாக்கியுள்ளனர்.இந்த படங்களில் பெரும்பாலானவை உழைக்கும் ஏழை எளிய விவசாயம் சார்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
புகைப்படக்கருவி இல்லாத காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஏஐ.,தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கிய ஒரு சில புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது,
கண்காட்சியில் 21 பெண் புகைப்படக்கலைஞர்களின் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளன,கண்காட்சி வருகின்ற மார்ச் 16 ஆம் தேதி வரை நடைபெறும் அனுமதி இலவசம்.
-எல்.முருகராஜ்