உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / பயணம் செய்ய வேண்டாம் பணம்

பயணம் செய்ய வேண்டாம் பணம்

கல்லுாரி முடித்து வேலைக்கு சென்ற பின் நண்பர்கள் இணைந்து சுற்றுலா செல்வதே அரிதாக மாறிய இன்றைய காலத்தில் இரண்டு நண்பர்கள் இணைந்து இந்தியா முழுவதும் பணம் இன்றி பயணம் செய்வதையே முழு நேரமாக மாற்றி, அதை செய்தும் காட்டியுள்ளனர். அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்கள் யாசின், சந்துரு.கோவையைச் சேர்ந்தவர் யாசின், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சந்துரு. இருவரும் கூறியதாவது:கல்லுாரி படிக்கும் போது இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கல்லுாரி முடித்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின் இதற்கான பணிகளை ஒவ்வொன்றாக செய்ய துவங்கினோம்.வழக்கமான பயணமாக இருக்கக்கூடாது. இதில் கிடைக்கும் அனுபவம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த கூடியதாக இருக்க வேண்டும் என முடிவு செய்து துவங்கியது இப்பயணம். கையில் பணம் எதுவும் எடுத்துச் செல்லாமல் லிப்ட் கேட்டும், நடந்து மட்டுமே செல்ல திட்டமிட்டு 2022 டிசம்பர் 19ல் கேரளாவில் இருந்து பயணத்தை துவக்கினோம்.பயணத்தை துவக்கிய போது பிற மொழி பேசுபவர்களிடம் சரியாக உரையாட முடியாமல் போனது. தொடர்ந்து முயற்சி செய்து பிற மாநில மக்களிடம் எப்படி பேசுவது, பயணம் குறித்து கேட்பவர்களிடம் உரையாடுதல் ஆகியவற்றை வளர்த்து கொண்டு தொடர்ந்து பயணித்தோம்.காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பயணம் செய்ய வேண்டும். பாதுகாப்பான இடங்கள், மக்கள் வசிக்கும் இடங்களில் மட்டுமே தங்க வேண்டும். இருவரின் டிராவல் பேக்கிலும் 25 கிலோவிற்கு அதிகமாகாமல், தேவையான பொருட்களை சுமந்து கொண்டு சரியான திட்டமிடலை ஏற்படுத்தி சென்றோம்.கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீர், லடாக் அங்கிருந்து டில்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், கிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், அசாம் என அனைத்து மாநிலங்களையும் சுற்றிய பின் கடந்த ஏப்ரல் 27ல் கன்னியாகுமரியில் பயணம் நிறைவடைந்தது.இந்த பயணம் துவங்கி 5 மாதங்கள் கடந்த பின் ராஜஸ்தான் சென்றதும், தொடர்ந்து பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. வட மாநிலங்களில் உணவு ஒத்துழைக்காமல் உடல்நிலை பாதிப்புக்குள்ளானோம்.வட மாநில மக்களின் வீடுகளில் விருந்தினராக தங்கி, உணவு அருந்திய அனுபவம் மறக்க முடியாதது. லடாக் பயணத்தில் மலையேற வாகனம் கிடைக்காமல் சிரமப்பட்ட போது ராணுவ வீரர்களின் உதவியுடன் பயணம் செய்தோம்.இந்த பயணத்தில் கிராமத்தினர், டாக்டர்கள் என பலரும் உதவி செய்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கை, மொழி, இனம், பழக்கவழக்கம், கலாசாரம் குறித்து இருவரும் அறிந்து கொண்டோம். இது புதிய அனுபவத்தை கொடுத்தது.பயணம் செய்ய மனம் இருந்தால் போதும், பணம் தேவையில்லை என்பதை கற்றுக் கொண்டோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை