‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா?
‛லப்பர்பந்து' என்ற வெற்றி படத்துக்குபின் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வர இருக்கும் படம் ‛தண்டகாரண்யம்'. இதை அதியன் ஆதிரை இயக்குகிறார். தினேஷ், கலையரசன், ரித்விகா, யுவன் மயில்சாமி உட்பட பலர் நடிக்கிறார்கள். செப்டம்பர் 19ல் படம் ரிலீஸ். தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியைக் குறிக்கும். தண்டம் (தண்டனை) மற்றும் ஆரண்யம் (காடு) ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும், அதாவது தண்டனைக்குரியவர்கள் வாழும் காடு என்று பொருள்.
ராமாயணத்தில், ராமர், சீதை மற்றும் இலக்குவன் ஆகியோர் வனவாசத்தின் போது இந்த தண்டகாரண்யத்தில் தான் தங்கினார்கள். மேலும், அந்தப் பகுதியில் ராட்சசர்கள் வாழ்ந்ததாகவும், அதனால் அது தண்டனைக்குரியவர்களின் காடு என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தண்டகாரண்யம் என்பது தற்காலத்தில் சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள ஒரு பெரிய வனப்பகுதியைக் குறிக்கிறது. இந்த கதைக்கும், இந்த படக்கதைக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை. இதற்குமுன்பு ‛இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு' என்ற படத்தை இயக்கியவர் அதியன் ஆதிரை. அதிலும் அட்டகத்தி தினேஷ்தான் ஹீரோ.