உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா

செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமை இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இப்போதும் 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார். பின்னர் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்கின்றனர். அதோடு இந்திய அளவில் உள்ள பிரபலமான திரைக்கலைஞர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இதுவரை எந்த சினிமா நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதில்லை. இளையராஜா பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்வாரா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. முதல்வர் வராவிட்டால் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் பாராட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !