மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர்
நடிகர் மம்முட்டி 70 வயதிலும் இளைஞனை போல சுறுசுறுப்பாக வருடத்திற்கு 5 படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தன்னுடைய படங்களின் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார் மம்முட்டி.
அந்த சமயத்தில் நடிகர் மோகன்லால் சபரிமலை சென்றபோது மம்முட்டி குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது கூட பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பூரண குணம் அடைந்துள்ள மம்முட்டி தான் நடித்து வந்த பேட்ரியாட் படத்தின் விசாகப்பட்டினம் மற்றும் லண்டன் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்தவர், எட்டு மாதத்திற்கு பிறகு சமீபத்தில் கேரளா திரும்பி உள்ளார்.
மம்முட்டி குணமடைந்ததை தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்திருந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற ரசிகர் கண்ணூர் தளிபரம்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரா கோவிலில் பொன் குடம் வழிபாடு என்கிற நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். அதாவது தங்கத்தை குடத்தில் வைத்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது என்பது தான் பொன்னின் குடம் வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. கோவில் நிர்வாகிகள் அவரது நேர்த்திக் கடனை ஏற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.