நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா
ஹிந்தியில் ரிலீசாகியுள்ள 'மஸ்தி 4' திரைப்படத்தில் தன்னுடைய பளீச் நடிப்பால் கவனம் ஈர்த்திருக்கும் நடிகை ஷ்ரேயா ஷர்மா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். எளிமையான தோற்றம், சிறப்பான நடிப்பால் கவர்ந்திழுத்த ஷ்ரேயா ஷர்மா ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பட அனுபவம் மற்றும் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்துள்ளார்.
ஷ்ரேயா ஷர்மா பேசியதாவது: ரசிகர்கள் தரும் அன்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. 'மஸ்தி 4' படம் ஜாலியாக அதேநேரத்தில் சவாலானதாகவும் இருந்தது. அப்படத்திற்காக எனக்கு கிடைத்திருக்கும் அதிகமான பாராட்டுகள், என் உழைப்பிற்கான பயனாக பார்க்கிறேன். 'மஸ்தி 4' படப்பிடிப்பில் முழு யூனிட்டும் உற்சாகத்தோடும், நட்போடும் பணியாற்றினோம். ஒரு குடும்பமாக ஒன்றாக செயல்பட்டோம். எங்களின் ஒத்துழைப்பால் படமும் நன்றாக வந்துள்ளது.
நகைச்சுவை படங்களில் நடிப்பது சவாலானது. நகைச்சுவைக்கு சரியான நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம். விவேக் ஓபராய், ரித்தேஷ் தேஷ்முக், ஆப்தாப் சிவதாசானி போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பலனாக கருதுகிறேன். அவர்கள் எனது நடிப்பை மேம்படுத்த உதவினர். எளிய, சுலபமான கதாப்பாத்திரங்களை நான் ரசிப்பதுண்டு; அதே நேரத்தில் ஆழமான, சவாலான கதைகளிலும் நான் என்னை நிரூபிக்க விரும்புகிறேன். கதைக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.