மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன்
தனியார் நிறுவனம் நடத்தும் 'பேன்லி' என்ற புதிய பொழுதுபோக்கு செயலி அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை குறைவு என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்திருந்தால் நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்.
எனக்கு எப்போதுமே என்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை. அவர்கள் கடவுளையும், அப்பா - அம்மாவை வணங்கினால் போதும். என்னுடன் அன்பாக பேசுவதையும், அண்ணனாக பழக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதனாலேயே ரசிகர்களை எப்போதுமே தம்பி - தங்கைகள் என்று அழைக்கிறேன்.
இப்போது சமூக வலைதளத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பயம் வருகிறது. அனைத்து சமூக வலைதளத்திலும் எனது பெயரில் கணக்கு இருக்கிறது. அதை வேறொருவர் தான் நிர்வாகித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே அவ்வப்போது சென்று வந்தேன். அதிலும் தவறுகள் செய்வதால் இப்போது அந்தப் பக்கமும் போவதில்லை. இப்போது எதிர்மறை கருத்துகள் தான் வைரலாகிறது என்பதால் அதை தான் விளம்பரம் செய்கிறார்கள். பொய்யாக எதையாவது சொன்னால் அதை நிறையப் பேர் பார்ப்பார்கள். என்றார்.