'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பராசக்தி'. வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் சர்ப்ரைசாக இணைந்துள்ளார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மலையாள இயக்குனரும் பிரபல நடிகருமான பசில் ஜோசப், பராசக்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனை வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் 'கோதா, மின்னல் முரளி' போன்ற படங்களை இயக்கி ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் பசில் ஜோசப் அதன் பிறகு 'குருவாயூர் அம்பல நடையில், பொன்மேன், சூட்சும தர்ஷினி' என தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கூட மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அடி எடுத்து வைத்துள்ளார் பசில் ஜோசப்.
இந்த நிலையில் பராசக்தி படத்தில் இவருடன் நடித்த அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “என்னுடைய நண்பர் பசில் ஜோசப் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் சுதா கொங்கராவின் அனுமதி பெற்று தான் வெளியே சொல்கிறேன். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் எங்களுடன் அவர் கலந்து கொண்டார். அந்த படப்பிடிப்பில் அவரது காட்சிகள் முடிவடைந்த பின்னும் எங்களுடன் மூன்று நாட்கள் தங்கி இருந்து ஜாலியாக செலவிட்டார். அதெல்லாம் இனிமையான நினைவுகள்” என்று கூறியுள்ளார்.