தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் 'வா வாத்தியார்', கார்த்தி, ஷில்பா மஞ்சுநாத், சத்யராஜ் நடித்துள்ள இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். தயாரிப்பாருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட படம் நாளை வெளியாகிறது.
இதை முன்னிட்டு நடந்த படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது: நான் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகட்டிவிட்டியாக, நிறைய செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது, இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான்.
நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அய்யோ பாவம் அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரும் தேவையில்லாத அனுதாபத்தை கொடுக்காதீர்கள். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நன்றி.
கேவிஎன் அண்ணா (ஜனநாயகன் தயாரிப்பாளர்), அவர்களின் 'ஜனநாயகன்' படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது, விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.