பல மொழிகளை கற்கிறேன்.. ரிஷப் ஷெட்டி, ராஜமவுலி படங்களில் நடிக்க ஆசை: ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா, ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும், அதன் பிறகு தெலுங்கு படங்களில் சில ஆண்டுகள் நடித்தார். பின்னர் தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4, சர்தார்' என பல படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழில் மாறி மாறி கவனம் செலுத்தி வந்த ராஷி கண்ணா, தற்போது மீண்டும் ஹிந்தியில் தனது பார்வையை திருப்பியுள்ளார். தற்போது ஹிந்தியில் 2, 3 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மொழிகளை கற்பது எனக்குப் பிடிக்கும். அதை ஒரு வேலையாகச் செய்து வருகிறேன். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளை நன்றாகப் பேசுவேன். இப்போது பஞ்சாபியும் பேசக் கற்றுள்ளேன். கொஞ்சம் பெங்காலியும் தெரியும். ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம்.
வித்தியாசம்
கதாபாத்திரங்களே முக்கியமாக இருந்தாலும், பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ள அம்மொழியை கற்பது அவசியம். அதனால், நான் எந்த மொழி படங்களில் நடிக்கிறேனோ, அந்தந்த மொழிகளை கற்றுக்கொள்கிறேன். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, பவன் கல்யாணுக்காக கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒவ்வொருவரும் சிறப்பான படத்தைக் கொடுக்கவே சினிமாவில் உழைக்கிறார்கள். அதற்காக அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். பல மொழிகளில் பணியாற்றினாலும் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை.
விருப்பம்
நடிகர்கள் ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்கள். அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரது இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். இந்த பட்டியலில், ரிஷப் ஷெட்டி, ராஜமவுலி ஆகியோரும் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.