'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக்
முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படம் 'ஜனநாயகன்'. எச்.வினோத் இயக்கியிருந்தார். ஜனவரி மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்னையால் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த எச்.வினோத்திடம் 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது எதிர்பார்க்கலாம் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: ''அது நம் கையில் இல்லை. அதில் இருக்கும் உண்மையை எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. அப்படியே எனக்கு தைரியம் வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அதனால் வரும் போது பார்ப்போம்''. இவ்வாறு அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் வந்திருந்த ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும், கிடைத்த உடன் ரிலீஸ் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.