மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா துவக்கம்
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய விழாவான ஆடித்தபசு வருகிற 9ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை 11:25 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளிய உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளினார். விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு,சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 9ம் தேதி நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.