ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. ஆண்டு தோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஸ்ரீநம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21ம்தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று 13ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
நெல்லளவு கண்டருளுகிறார் : அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாளுக்கு ஊஞ்சல் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடந்தது. அப்போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான , 19-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.
தீர்த்தவாரி : அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் கண்டருள்கிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார். விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் சந்திர புஸ்கரிணியில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.