கோயில் விழாவில் அம்மனாக வழிபட 7 சிறுமிகள் தேர்வு
மேலூர் : மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிறுமிகளை அம்மனாக வழிபடும் கிராம மக்களின் திருவிழா, நேற்று முன்தினம், சிறுமிகள் தேர்வுடன் துவங்கியது. மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். 60 கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியை ஐந்து மாகாணங்கள் கொண்ட, "வெள்ளலூர் நாடு என, இன்றும் இப்பகுதியினர் அழைக்கின்றனர். ஆவணியில் ஏழைகாத்தம்மன் கோவில் விழா கொண்டாடப்படும். இதற்காக மூண்டவாசி, வேங்கபுலி, சமட்டி, நக்காயன், சாயும் படைதாங்கி, வெக்காலி, சலிப்புலி, திருமா, செம்புலி, நண்டக் கோப்பன், பூலான் மழவராயன் எனப்படும், 11 கரைகளை சேர்ந்த, 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக, 11 கரையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், கோவில் முன் நேற்று முன்தினம் காலை பெற்றோருடன் கூடினர். அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும், 15 நாட்கள் இரவில் கோவிலில் தங்கி இருந்து, பகலில், 60 கிராம மக்களையும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஆசீர்வதிப்பர். இதைத் தொடர்ந்து, 15வது நாளில் பெண்கள் மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்து, ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். விழா நாட்களில், 60 கிராமங்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர், வெளிநாடு சென்றுள்ளவர்கள் விரதம் இருப்பர். மாமிச உணவு, தாளித்த உணவு வகைகளை உண்பது கிடையாது. பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் நடக்காது.