சிவன் கோயில்களில் டிச., 27ல் ஆருத்ரா தரிசனம்; ஈசனின் ஆனந்த தாண்டவம் தரிசிக்கலாம்
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்து வருகிறது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இதனை அடுத்து பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச் சன்னதி கொண்டிருக்கும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா டிச., 18 இரவு தொடங்கியது. அன்று மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு, தினமும் காலையில் ஆடி வீதியில் உலா வருகிறார். தினமும் மாலை திருவெம்பாவை வாசிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. டிச., 26 இரவு 7:00 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடாகி, மகா மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம், தொடர்ந்து 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.