இன்று சூரசம்ஹாரம்: தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...
* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.
* முருகனின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிறைவேறிய ஊர் திருச்செந்துார்.
* அறுபடை கோயில்களில் பெரியது திருச்செந்துார்.
* திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என பெயருண்டு. வீரபாகுவுக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.
* பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர்.
* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையின் பெயர் பாம்பறை.
* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுகின்றனர்.
* சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்பர்.
* ராஜ கோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
* திருச்செந்துார் மீது அருணகிரிநாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடினார். இதை பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
* திருச்செந்துார் கோயிலின் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.
* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. இதனை 124 துாண்கள் தாங்குகின்றன.
* 24 அடி ஆழம் கொண்ட நாழிக்கிணறில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.
* மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தனர். இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
* மன்னார் வளைகுடாவின் கரை ஓரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் அலைவாய் எனப்பட்டது.
* கோயிலுக்குச் செல்லும் வழியில் துாண்டுகை விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிய
பின் முருகனை வணங்க வேண்டும்.
* மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள மாப்பாடு(மாமரத்தை பிளந்ததால்). அது தற்போது மணப்பாடாகி மாறியது.
* மூடிய ராஜகோபுரம் சூரசம்ஹாரம் முடிந்த, மறுநாளில் நடக்கும் தெய்வானை திருமணத்தின் போது திறக்கப்படும்.
* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனத்தை (நிர்மால்ய பூஜை) பார்ப்பது விசேஷம்.
* கால அடிப்படையில்
ஆதிசங்கரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக் கூத்தர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட பல அடியார்கள் திருச்செந்துாரானின் அருள் பெற்றவர்கள்.
* செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என பெயருண்டு.
* வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க நகைகளை முருகப்பெருமானுக்கு காணிக்கை அளித்தனர்.
* திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவார். அதற்காக 100 கிலோ எடை கொண்ட மணியை ஒலிக்கச் செய்தார். ராஜகோபுரம் 9ம் அறையில் இது உள்ளது.