5,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சிருங்கேரியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கிக்காவுக்கு செல்ல வேண்டும்.
ஆதிசங்கரர் சாரதா பீடத்தை நிறுவிய சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கிக்கா கிராமத்தில், 5,000 ஆண்டுகள் பழமையான ரிஷ்ய சிருங்கேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு சிவலிங்கம், மான் கொம்பு, மீசையுடன் காட்சி அளிக்கிறார்.
மான் கொம்பு புராணங்கள்படி, மகரிஷி காஷ்யப்பின் மகன் மகரிஷி விபண்டகா. இவரது தவத்தால், மான் கொம்புடன் மகன் பிறந்தததால், ரிஷ்ய சிருங்கர் என பெயர் சூட்டப்பட்டது.மகனை உலகின் பார்வையில் இருந்து பாதுகாக்க நினைத்த மகரிஷி விபண்டகா, அடர்ந்த வனப்பகுதியாக இருந்த தற்போதைய சிருங்கேரி டவுனில், துங்கபத்ரா நதிக்கரையில் மகனை வளர்த்தார். இதனால் உலகத்தின் தொடர்பு, பாலின வேறுபாடுகள் கூட அறியாதவராக ரிஷ்ய சிருங்கர் வளர்ந்தார்.
பிரம்மச்சரியம் தன் மகன் வேத வாழ்க்கைக்கு ஏற்ப பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ விரும்பினார். இதனால், அவரது மகன் அப்பாவியாகவும், துாய்மையானவராகவும் இருந்தார். இப்பகுதியில் உள்ள ஒரு சிறிய மலையில் இருந்த சிவலிங்கத்தை, தந்தையும், மகனும் வழிபட்டனர். இது ரிஷ்ய சிருங்கருக்கு, ஆன்மிக சக்தியை வழங்கியது. இந்நேரத்தில், ரோமபாத ராஜ்ஜியத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னரின் ஆலோசகர்கள், ‘மகரிஷி ரிஷ்ய சிருங்கரின் புனித பாதம், நம் மண்ணில் பட்டால், இந்த நிலை மாறி, மழை பெய்யும்’ என்றனர்.
இதை ஏற்ற மன்னர், மகரிஷியை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அங்கு சென்றவர்களும், மகரிஷி விபாண்டகா இல்லாத நேரத்தில், அவரது மகனை அழைத்து வந்தனர். மகரிஷியை வரவேற்க, தனது நாட்டின் எல்லையில், ரோமபாத மன்னர் காத்திருந்தார். திருமணம் மகரிஷி, ரோமபாத மன்னரின் நாட்டில் கால் வைத்த உடனே, மழை பெய்து, வறட்சி நீங்கியது. இதனால் மகிழ்ந்த மன்னர், தன் மகள் சாந்தாவை, ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்து வைத்தார். திருமணத்துக்கு பின், அரச மாளிகையில் தங்கினார்.
இந்த காலகட்டத்தில், அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்தி, மகரிஷியின் தெய்வீக உதவியை நாடினார். அவர், ரிஷ்ய சிருங்கர் மூலம், புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தியதன் பலனாக, ராமர் உட்பட நான்கு மகன்கள் பிறந்தனர். உலக கடமைகளில் நிறைவை கண்ட ரிஷ்ய சிருங்கர், மீண்டும் தான் வளர்ந்த வனத்துக்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தார்.
அங்கு சென்ற அவர், தனது மீதமுள்ள ஆண்டுகளை தெய்வீக சிந்தனையிலும், வழிபாட்டிலும் கழிக்க அங்கேயே தங்கினார். அவர், முக்தி அடையும் நேரம் வந்தது. அப்போது அவரது உடலில் இருந்து ஒரு பிரகாசமான ஒளி வெளிப்பட்டு, அவர் பக்தியுடன் வழிபட்டு வந்த சிவலிங்கத்துடன் ஐக்கியமானதை அங்கிருந்த பலர் பார்த்தனர். அப்போதிருந்து சிவலிங்கம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இந்த கொம்பு, சிவனுடன் ரிஷ்ய சிருங்கர் கலந்ததை நினைவுப்படுத்துகிறது.
இது தவிர, இப்பகுதியில் முன்னொரு காலத்தில் காபி விளைவித்து வந்த மக்கள், மழையின்றி பயிர்கள் நாசமாகின. அப்போது இப்பகுதியை சேர்ந்த சிலர், இக்கோவிலில் ஹோமம் நடத்தினர். ஹோமம் நடத்தி முடித்தவுடன், மழை பெய்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், யாரொல்லாம் ஹோமம் செய்தார்களோ, அவர்களின் வயல்களில் மட்டுமே மழை பெய்ததாகவும் கூறுகின்றனர். இத்தகைய சக்தி வாய்ந்த கோவிலுக்கு, தினமும் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
எப்படி செல்வது?
* பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
* ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 98 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
* பஸ்சில் செல்வோர், சிருங்கேரி பஸ் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, உள்ளூர் பஸ், டாக்சியில் செல்லலாம்.
* திறப்பு: அதிகாலை 5:30 முதல் 8:00 மணி வரை; 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை; மாலை 4:30 முதல் இரவு 8:15 மணி வரை.
* திருவிழா: சித்திரை மாதத்தில் ரத உத்சவம்.