பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
உத்திரமேரூர்: பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திரிபுரசுந்தரி சமேத பிரம்மீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேக விழா நடந் தது. பின், விமான கோபுரம் பழுதடைந்து காவல் தெ ய்வங்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சிதிலம் அடைந்து இருந்தன. இதையடுத்து, 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சில மாதங்களாக கோவில் கட்டடங்கள், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள ஐந்து நிலை கோபுரங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகளில் மண்டபம் மற்றும் நந்தி, நவகிரகம் உள்ளிட்டவை புதிதாக அமைத்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. புனரமைப்பு பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, 5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் காலை மூலவர் சுவாமி, அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை கோ பூஜை, விக்னேஷ்வர பூஜைகளை தொடர்ந்து, காலை, 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, 10:00 மணிக்கு முகப்பு மற்றும் அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.