பசூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் அழைப்பு
ADDED :4633 days ago
அன்னூர்: அன்னூர் அருகே பசூரில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. நான்கு நாட்களுக்கு தினமும் முரசு கொட்டுதல் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. 28ம் தேதி அம்மன் ஆபரண பேழை எடுத்து வரப்பட்டது. மாலையில் விநாயகர் கோவிலிலிருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. 29ம் தேதி அலங்கார குதிரையில் அழைப்பு நடந்தது. மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கப் பட்டது. மதியம் பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். மாலையில் அம்மன் திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. நேற்று காலை குப்பாயம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் பங்கேற்றனர்.