கன்னியாகுமரி: ஐயப்ப பக்தர்கள் சீசனுக்கு தயாராகி வருகிறது
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் மதுரை, ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். கன்னியாகுமரிக்கு நவ. 17-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். முன்னேற்பாடுகள் குறித்து பேரூராட்சித் தலைவர் பிரபா வின்ஸ்டன் கூறியதாவது: இங்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. நகரைச் சுத்தமாக வைக்க சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுத்தரிக்கப்பட்ட குடிநீர், போதுமான அளவுக்கு தாற்காலிகக் கழிப்பிடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.