சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு தினமும் என்ன சாப்பாடு?
ADDED :4336 days ago
சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையின் போது, அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது, விபூதி, பால்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் ஆகிய எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். திருமதுரம் என்னும் பிரசாதம் நைவேத்யம் செய்யப்படும். இதை பழம், தேன், சர்க்கரை சேர்த்து தயாரிப்பர். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். நண்பகலுக்கு முன்பு 15 தீபாராதனைகள் நடக்கும். அந்த தீபாராதனையின் போது பச்சரிசி சாதம் படைக்கப்படும். மதிய பூஜையின் போது, இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் ஆகியவை சேர்த்து பாயாசம் தயாரிக்கப்படும். இதை மதிய உணவாக ஏற்கிறார் ஐயப்பன். மகா நைவேத்யம் என்று இதற்குப் பெயர். இரவு பூஜையின் போது, அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.