உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூசம்: குவியும் பக்தர்கள்.. அர்ச்சனை செட் ரூ.200!

பழநி தைப்பூசம்: குவியும் பக்தர்கள்.. அர்ச்சனை செட் ரூ.200!

பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில் 3 மணிமுதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் விடலைக்காய் உடைத்து வழிபாடு செய்ய, தேங்காய் வாங்குவதால் விற்பனை, விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டு விலை ரூ.200 வரை விற்கின்றனர்.

அதிகரிப்பு: பாதயாத்திரை வரும் பக்தர்கள் கிரிவீதியை வலம் வரும் போது, அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகர் கோயிலிலும், மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் நுழைவுப்பகுதியிலும் விடலைத்தேங்காய் (சிதறுகாய்) உடைத்து வழிபடுகின்றனர். இதன் காரணமாக தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால், வெளிமார்க்கெட்டில் ரூ.6 முதல் 10 வரை விற்கப்படும் தேங்காய்களை ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கின்றனர். வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அர்ச்சனை தட்டு விலை ரூ.80 முதல் 200 வரை விற்பதால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடி பக்தர் மீனாம்பிகை கூறுகையில், 10பேர் கொண்ட குழுவாக பழநிக்கு 6 நாட்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தோம். கடந்த 5 ஆண்டுகளாக வருகிறோம். பாதவிநாயகர்கோயில் உட்பட அனைத்துகோயிலும் விடலைக்காய் உடைத்து வழிபடுவது வழக்கம்.  ஒரு தேங்கா ரூ.30 என்கிறார்கள். அனைத்து கோயில்களிலும் விடலைக்காய் உடைத்துவழிபாடு செய்து வந்தோம். விலை உயர்வு காரணமாக பாதவிநாயகர் கோயில், வெளிப்பிரகாரத்தில் மட்டும் தேங்கா உடைத்து வழிபாடு செய்தோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !