உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழாவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் விழாவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனூர்: மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மோகனூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 31ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டனர். அதேபோல், தினமும் இரவு ஸ்வாமி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், இரவு, 7 மணிக்கு வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைத்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு பூக்குழி பூஜை நடந்தது. காலை, 10 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடமும், அக்னி சட்டியும் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. மதியம், 3 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற, ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, ஸ்வாமிக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.இன்று, (ஏப்., 15) காலை, கிடா வெட்டியும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள், ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !