உளுந்தூர்பேட்டை பகுதியில்பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.எலவனாசூர்கோட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 4.30 மணி முதல் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார்.
அதே போல் பரிக்கல் ஸ்ரீகுழந்தை ஈஸ்வரர் கோவில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவில், உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீமாஷபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் திருநாவலூர் ஸ்ரீமனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. பிரதோஷத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.