காரைக்காலில் உலக நன்மை வேண்டி தீச்சட்டி ஊர்வலம்!
ADDED :3667 days ago
காரைக்கால்: காரைக்காலில் உலக நன்மை வேண்டி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பஞ்சபூதங்கள் நல்ல பலன்களை தரவும், மேட்டூர் அணை நிறையவும், விவசாயம் செழிக்கவும், மழைவளம் வேண்டியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முளைப்பாலிகை, தீச்சட்டி, கஞ்சி கலயம் எந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் அம்மையார் மணி மண்டபத்திலிருந்து துவங்கி பாரதியார் சாலை, பி.கே. சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு வந்தடைந்தது. ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.