ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா: அசுத்தம் நிறைந்த தெப்பத்தால் வேதனை!
ADDED :3569 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவி., ஆண்டாள் வசந்த உற்சவ விழா நாளை (மே12) துவங்க உள்ள நிலையில்,தெப்பத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றாதது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது. 10 நாட்கள் நடக்கும் இக்கோயில் வசந்தஉற்சவம் விழா போது, தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார், நாடகசாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில் உள்ள தெப்பத்தில் எழுந்தருள்வார். அங்கு கோதாஸ்துதி, திருவாராதனம் கோஷ்டி நடக்கும். இவ் விழா நாளை துவங்க உள்ள நிலையில் கோயில் சுத்தம் செய்யபட்டு, தெப்பம் வெள்ளையடித்து புதுப்பிக்கபட்டுள்ளது. ஆனால் தெப்பத்தில் தண்ணீர் இன்றி குப்பை, அசுத்தங்கள் நிறைந்து காணப்படுவது, பக்தர்களுக்கு மன வேதனையை தந்துள்ளது. தெப்பத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்றி, ஓரளவிற்காவது தண்ணீர் நிரப்பி வசந்த உற்சவ விழாவை நடத்திட, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.